3 ராஜ்யசபா எம்பிக்களை இழக்கும் அதிமுக-அன்புமணி கதி என்ன?

ராஜ்யசபாவில் மொத்தம் 232 எம்பிக்கள் உள்ளனர். இந்த எம்பிக்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் ஆகும்.
ராஜ்ய சபா எம்பிக்கள் மாநில சட்டமன்ற எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். சட்டமன்றத்தில் அந்தக் கட்சிக்கு உள்ள எம்எல்ஏக்களின் பலத்தை வைத்து ராஜ்ய சபா எம்பிக்கள் தேர்வு செய்யப்படுவர்.
தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபாவுக்கு ஒரு எம்பியை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
இதன்மூலம் தமிழகத்துக்கு 18 ராஜ்யசபா எம்பிக்கள் உள்ளனர்.
தற்போது திமுக சார்பில் கனிமொழி, திருச்சி சிவா, ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோரும், அதிமுக சார்பில் தினகரன்,
மலைச்சாமி, எஸ்.அன்பழகன், கோவிந்தராஜர், மைத்ரேயன்,
இளவரசன், பாலகங்கா ஆகியோரும்,
காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பன், ஞானதேசிகன், ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோரும்
பாமக சார்பில் டாக்டர் அன்புமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரெங்கராஜன் ஆகியோரும் ராஜ்யசபா எம்பிக்களாக உள்ளனர்.
இதில் அன்புமணி, சுதர்சன நாச்சியப்பன், தினகரன், மலைச்சாமி, எஸ்.அன்பழகன், கோவிந்தராஜர் ஆகியோரின் பதவிக் காலம் காலம் வரும் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதைத் தொடர்ந்து இந்த 6 இடங்களுக்கு புதிதாக 6 பேரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தற்போதையை சட்டமன்றத்தில் திமுகவுக்கு 98 எம்எல்ஏக்களும், அதிமுகவுக்கு 57 எம்எல்ஏக்களும்,
காங்கிரசுக்கு 36ம், பாமகவுக்கு 18ம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் 6 எம்எல்ஏக்களும்,
மதிமுகவுக்கு 3ம், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 2 எம்எல்ஏக்களும், தேமுதிகவுக்கு 1 எம்எல்ஏவும், சுயேச்சை ஒருவரும் (தளி-ராமச்சந்திரன்) உள்ளனர்.
அதிமுக சார்பில் வென்ற எஸ்.வி.சேகர் எந்தக் கட்சியையும் சேராதவர் என்று அறிவிக்கப்பட்டுவிட்டார். மற்றும் கோவில்பட்டி எம்எல்ஏ ராதாகிருஷ்ணனும் விரைவிலேயே இந்தப் பட்டியலில் வந்துவிடுவார் என்று தெரிகிறது. இதனால் அதிமுகவின் பலம் மேலும் ஒன்று குறையும்.
இவர்கள் தவிர ஒரு நியமன எம்எல்ஏ, சபாநாயகர் ஆகியோர் உள்ளனர். பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ இடம் காலியாக உள்ளது.
இதனால் இப்போது சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளின் பலத்தை வைத்து திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் 4 எம்பிக்களும், அதிமுக-கம்யூனிஸ்ட் கூட்டணி சேர்ந்தால் 2 எம்பிக்களும் தேர்ந்தெடுக்க முடியும்.
பாமகவைப் பொறுத்தவரை திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைக்காவிட்டால் 18 எம்எல்ஏக்கள் இருந்தாலும் கூட அந்தக்கட்சியால் யாரையும் ராஜ்யசபாவுக்கு எம்பியைத் தேர்ந்தெடுக்க முடியாது.
அதேபோல அதிமுகவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி உதவினால் தான் அந்தக் கூட்டணியால் இரண்டாவது எம்பியை தேர்வு செய்ய முடியும். இல்லாவிட்டால் அதிமுகவால ஒரே ஒரு எம்பியை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது 7 எம்பி சீட்டுகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் என்ற ஒப்பந்தத்தில் தான் அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்தது. ஆனால், தான் தந்த எந்த உத்தரவாதத்தையும் மதிக்காதவர் ஜெயலலிதா. இதனால், பாமகவுக்கு அவர் ராஜ்யசபா சீட்டை ஒதுக்க வாய்ப்பில்லை.
மேலும் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7 இடங்களிலும் தோற்ற பாமக, அதிமுகவுடனான தனது கூட்டணியையும் முறித்துக் கொண்டுவிட்டது. இதனால் அந்தக் கட்சிக்கு அதிமுக சார்பில் ராஜ்யசபா சீட்டைத் தர வேண்டிய அவசியமும் ஜெயலலிதாவுக்கு இல்லை.
அதே போல அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து இரண்டாவது எம்பியைத் தேர்வு செய்ய இடதுசாரிகள் உதவினால், அந்த எம்பி சீட்டை அவர்கள் தங்களுக்கே கோரவும் வாய்ப்புள்ளது. இதை ஜெயலலிதா விட்டுத் தந்தால் இடதுசாரிகள் சார்பில் ஒருவர் ராஜ்யசபாவுக்குச் செல்லலாம்.
அதே நேரத்தில் பாமகவுக்கு இடதுசாரிகள் உதவினால் பாமக சார்பில் ஒரு எம்பியைத் தேர்வு செய்யலாம்.












Click it and Unblock the Notifications