கனடா: 'உதயன்' வார இதழ் அலுவலகம் சூறை
கனடா ஐக்கிய தமிழ் கவுன்சில் தலைவரும் கனடா-இந்திய பிஸினஸ் கவுன்சி்ல் தலைவருமான குல செல்லதுரை சமீபத்தில் கொழும்பில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து தமிழர்கள் விவகாரம் குறித்துப் பேசினார்.
மேலும் போரில் அநாதரவாகிவிட்ட குழந்தைகளின் நலனுக்காக நிதியும் வழங்கினார். இது தொடர்பான செய்தியை கனடாவின் உதயன் இதழ் வெளியிட்டது. இதன் ஆசிரியரான லோகன் லோகேந்திரலிங்கம், செல்லதுரையின் நெருங்கிய நண்பராவார்.
ராஜபக்சேவுடனான சந்திப்பை ஆதரிப்பது போல செய்தி வெளியானதாகக் கூறி உதயன் நாளிதழ் அலுவலகத்தை இலங்கைத் தமிழர்கள் சனிக்கிழமை தாக்கினர்.
முன்னதாக லோகேந்திரலிங்கத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திட்டிய பல தமிழர்கள் திடீரென அலுவலகத் தாக்குதலில் இறங்கினர்.
இது குறித்து செல்லதுரை கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் லோகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்கள் நண்பர் ராஜக்சேவை சந்தித்துள்ளார். இப்போது நீங்கள் உங்கள் அலுவலகத்துக்கு சென்று, அங்கு என்ன நடந்துள்ளது என்பதைப் பாருங்கள் என்று கூறியுள்ளனர் என்றார்.
இந்தத் தாக்குதலுக்கு கனடா தமிழ் காங்கிரஸ் தலைவர் டேவிட் பூபாலபிள்ளை கண்டனம் தெரிவித்துள்ளார். பிரச்சனைகளுக்கு வன்முறை தீர்வல்ல. கருத்தை வெளியிட அனைவருக்கும் உரிமை உண்டு. அதை அனைவரும் மதிக்க வேண்டும.
அதே நேரத்தில் பல்வேறு மனித உரிமை அமைப்புகளால் போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ராஜபக்சேவுடன் பேச்சு நடத்துவதையும் ஏற்க முடியாது.
ராஜபக்சேவை சந்தித்த செல்லதுரை, இலங்கை அரசின் ஏஜென்ட் ஆவார். அவர் அந் நாட்டு அரசின் கைக்கூலி. தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயலும் இலங்கை அரசின் வலையில் செல்லதுரையைப் போன்றவர்கள் விழுவது கவலைக்குரியது என்றார் பூபாலபிள்ளை.