திண்டுக்கல்: சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுள் என்று புளகாங்கிதப்பட்டு கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த்.சச்சின் போட்ட இரட்டை சத சாதனையைப் பற்றி தொடர்ந்து பெருமை பொங்கப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அனைத்துத் தரப்பினரும்.அந்த வரிசையில் ஸ்ரீகாந்த் தன் பங்குக்கு சச்சினை கிரிக்கெட்டின் கடவுள், இறைவனால் சாதனை படைக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர் சச்சின் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரியில், இன்ஜியரிங் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த், பரிசுகளை வழங்கி பேசியதாவது:கிரிக்கெட் தேர்வுக் குழுவில் பரிந்துரைகளை விட, திறமைக்கு அதிக மதிப்பு கிடைக்கும். உரிய நேரத்தில் வாய்ப்புகளில் திறமையை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு, அணியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.சச்சின் டெண்டுல்கரின் தொடர் சாதனைகளுக்கு, அவரது பணிவும், தன்னம்பிக்கையும், ஆர்வமும் தான் காரணம். குறிப்பிட்ட சாதனையை இவரால் மட்டுமே முடிக்க இயலும் என இறைவன் தேர்ந்தெடுத்துள்ளார். இதன் படி தனது சாதனைகள் மூலம் கிரிக்கெட்டின் கடவுளாக சச்சின் டெண்டுல்கர் உயர்ந்து நிற்கிறார். மூளையை கேட்டு செயல்படுவதால், ஒரே நிலையில் செயல்படுவதில் குழப்பமும் தடையும் ஏற்படும். இதயத்தோடு இணைந்த செயல்களில் மட்டுமே முழுமையான இலக்கை எட்ட முடியும். மாணவர்கள் அனைத்து துறைகளிலும், தன்னம்பிக்கை, ஆர்வம், துணிவுடன் துரிதமாக செயல்பட்டால் வெற்றி எளிது என்றார்.