சாருலதாவுடன் தொடர்புடைய உதவி ஆணையர் உள்பட 2 காவல் அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை
ஆயுதப்படையில் துணை கமிஷனராக பணி புரிந்த சிங்காரவேலன் நேற்று முன்தினம் ஓய்வு பெற இருந்தார். ஆனால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படவில்லை. நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அவர் துணை சூப்பிரண்டாக சேலத்தில் பணிபுரிந்த போது ரூ.14 லட்சம் மோசடி செய்து விட்டதாக ஒரு வழக்கு உள்ளது என்றும், அதை மறைத்து அவர் பதவி உயர்வு பெற்றதாகவும், இப்போது குற்றச்சாட்டு எழுந்து, அவர் ஓய்வு பெற்றுச் செல்ல முடியாமல் குற்றவாளி கூண்டில் கடைசி நேரத்தில் ஏற்றப்பட்டுள்ளார்.
இதேபோல அதே ஆயுதப்படை போலீசில் உதவி கமிஷனராக இருக்கும் பழனிச்சாமியும் சிக்கியுள்ளார்.
பெண் போலீஸ் அதிகாரி போல நடித்து பல லட்சம் பணத்தை சுருட்டிக் கைதான சாருலதாவுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
தான் மோசடி செய்த பணத்தில் ரூ.10 லட்சத்தை உதவி கமிஷனர் பழனிச்சாமியிடம் கொடுத்துள்ளதாக, சாருலதா வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதை பழனிச்சாமி விசாரணையின்போது மறுத்துள்ளார். இருப்பினும் இவர் மீதும் நடவடிக்கை பாய்வது உறுதி என்கிறார்கள்.
இதற்கிடையே, முன்னாள் டிஜிபி ஒருவருடன் சாருலதாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்தும் போலீஸ் தரப்பில் தீவிர விசாரணை நடந்து வருகிறதாம்.