'200 ச.அடி கான்கிரீட் வீடுகள் போதாதே': தா.பாண்டியன்
சென்னை: குடிசைவாழ் மக்களுக்கு அரசு கட்டித் தரவுள்ள 200 சதுர அடி கான்கிரீட் வீடுகள் போதுமானதாக இருக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
குடிசைகளே இல்லாத தமிழகத்தை உண்டாக்குவோம் என்ற சீரிய நல்லெண்ணத்துடன், குடிசைவாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை, திருச்சியில் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
அத்திட்டத்தின்படி, ஒவ்வொரு குடியிருப்பும் 200 சதுர அடி பரப்பளவில், 60 ஆயிரம் கட்டுமானச் செலவில் நிறைவேற்றப்படும் எனக் கூறியிருப்பதை, மறுபரிசீலனை செய்து செழுமைப்படுத்த வேண்டுகிறோம்.
200 சதுர அடியில் ஒரு குடும்பம் சுகாதார வசதிகளுடன் வாழப் போதுமானதாக இராது. அதை கிராமப்புறங்களில் விரிவாக்க வேண்டும். அறுபதாயிரத்தில் கட்டப்படும் கெட்டி வீடு, நீடித்து நிலைக்கப் போதுமானதாக இராது.
ஒரு மாதிரி வீட்டை, வீடு கட்டுவோரிடம் ஒப்பந்தப்புள்ளி கேட்டுப் பரிசீலித்து, அதற்குரிய தொகையை நிர்ணயிக்கலாம். பொதுவாக மக்கள் மூன்று லட்சம் ரூபாய் தேவைப்படும் எனக் கருதுகின்றனர்.
தமிழ்நாட்டில் பிறந்த தமிழக ஏழைகள் பாதுகாப்பான சுகாதாரத் தேவைகளுடன் கூடிய வீடுகளில் குடியேறி வாழ, இத்திட்டம் பயன்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் தா. பாண்டியன்.