சூடானில் உள்நாட்டுக் கலவரம்- ராணுவம் தாக்கியதில் 200 பொதுமக்கள் பலி
தர்ஃபுர் பிராந்தியத்தில் உள்ள ஜெபல் மரா பகுதியில் தான் கலவரம் வெடித்துள்ளது. இப்பகுதியில் இயங்கி வரும் புரட்சிக்காரர்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தம் முறிந்து போய் விட்டதால் மீண்டும் இங்கு உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.
அங்கு தொடங்கி வேகமாக பல்வேறு பகுதிகளுக்கும் கலவரம் பரவி வருகிறது. கலவரத்தை ஒடுக்க ராணுவம், விமானப்படை ஆகியவை கடும் தாக்குதலில் இறங்கியுள்ளன. இதில் 200க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் இறந்துள்ளதாக புரட்சிக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் இதை ராணுவம் மறுத்துள்ளது. உயிரிழப்பை உறுதி செய்ய முடியவில்லை என்று ஐ.நா. கூறியுள்ளது. ஆனால் இதுவரை 237 பேர் கொல்லப்பட்டுள்ளதாக புரட்சிப் படையின் தலைவரான இப்ராகிம் அல் ஹில்லு கூறியுள்ளார். தொடர்ந்து ராணுவம் தாக்கி வருவதாகவும், விமானப்படை மூலம் மக்கள் மீது இரவு பகலாக குண்டு வீசி வருவதாகவும் ஹில்லு கூறியுள்ளார்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், புரட்சிப் படையினர் கூறுவது தவறான தகவல். படையினர், எந்தத் தாக்குதலிலும் ஈடுபடவில்லை.
சூடான் விடுதலைப் படையின் அப்தல் வாஹித் பிரிவினர்தான் அவ்வப்போது படையினரைத் தாக்கி வருகின்றனர். அவர்களுடன் படையினர் மோதலில் ஈடுபட்டிருக்கலாம். மற்றபடி ராணுவம் தாக்குதல் எதிலும் ஈடுபடவில்லை என்றார்.
ஐ.நா. - ஆப்பிரிக்க யூனிடன் கூட்டு அமைதி காக்கும் படையினரும், இந்த மோதலை உறுதி செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பகுதிக்கு எங்களால் போக முடியவில்லை. எனவே உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்று அப்படையின் தலைவரான பாட்ரிக் யம்வும்பா கூறினார்.
இந்த சண்டை காரணமாக ஜெபல் மாரா பகுதியிலிருந்து 1 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
டெரிபத் என்ற நகரில்தான் கடும் சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அங்கு செல்லமுடியாமல் அமைதி காக்கும் படையினர் தவித்து வருகின்றனராம்.