பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு- மாட்டு வண்டியில் சட்டசபைக்கு வந்த நாயுடு
ஹைதராபாத்: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து சட்டசபைக்கு மாட்டு வண்டியில் வந்தார் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு.
பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை பிரணாப் முகர்ஜி உயர்த்தியுள்ளார். இதைத் திரும்பப் பெறுமாறு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால் திரும்பப் பெற முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக கூறி விட்டார்.
இந்த நிலையில் இன்று காலை தொடங்கிய ஆந்திர சட்டசபைக் கூட்டத்திற்கு, எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, மாட்டு வண்டியில் வந்தார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக சுமார் அரைகிலோ மீட்டர் தூரத்திற்கு மாட்டு வண்டியில் வந்த அவர் அதன் பிறகு சைக்கிளுக்கு மாறி அதில் சவாரி செய்தபடி சட்டசபைக்கு வந்தார்.
நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் சின்னம் சைக்கிள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி நூதன முறையில் போராட்டம் நடத்தியபடி சட்டசபைக்கு வந்த நாயுடு அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு சாமான்ய மக்களை மிகவும் பாதித்துள்ளது. மக்கள் மீது இத்தகைய சுமையை ஏற்றிவிட்டு சாமான்ய மக்களின் நலன் பற்றி பிரதமர் பேசுவது பொருத்தமற்றது என்றார்.
இதேபோல பாஜக எம்.எல்.ஏ கிஷன் ரெட்டி, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சட்டசபைக்கு வந்தார்.
சட்டசபையில் இன்று கூட்டம் தொடங்கியதும், தெலுங்குதேசம், கம்யூனிஸ்ட் கட்சிகள், பிரஜா ராஜ்யம் உறுப்பினர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர்.
ஆனால் அதை அனுமதிக்க சபாநாயகர் மறுத்து விட்டார். இதையடுத்து எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.