ஆஸி: தமிழ் தம்பதி மீது ஆஸி.யில் தாக்குதல்-எதிர்த்துப் போராடி தப்பினர்
மெல்போர்ன்: மெல்போர்ன்: இந்தியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்மணியும், இலங்கைத் தமிழரான அவரது கணவரும் ஆஸ்திரேலியாவில் இனவெறித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களை எதிர்த்து இரும்புக் கம்பி ஒன்றின் துணையுடன் அந்தத் தமிழர் துணிச்சலுடன் சண்டை போட்டு உயிரைக் காப்பாற்றியுள்ளார். இந்த சண்டையில் ஒரு இனவெறியர் காயமடைந்தார். காயமடைந்த நபரை போலீஸார் மீட்டு அவரது வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளனர்.
அந்தத் தமிழரின் பெயர் ரஞ்சித் சஹஸ்ரநாமன் (60). இவரது மனைவி அகல்யா சகஸ்ரநாமன். ரஞ்சித் இலங்கையைச் சேர்ந்தவர், அகல்யா தமிழகத்தைச் சேர்ந்தவர்.
மெல்போர்ன் நகரில் காரம்ஸ் டவுன் புறநகர்ப் பகுதியில் சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை அங்கு குடி போதையில் கிட்டத்தட்ட 25 பேர் அங்கு திரண்டு வந்தனர். வீட்டின் பின் பகுதி வேலியை உடைத்துக் கொண்டு அவர்கள் உள்ளே புகுந்தனர்.
இவர்கள் வருவதைப் பார்த்ததும் ரஞ்சி்த் வீட்டில் கிடந்த இரும்புக் கம்பி ஒன்றை கையில் எடுத்துக் கொண்டார். அவர்களுடன் மோதவும் தயாரானார்.
பெரும் கும்பலாக அவர்கள் வந்தும் கூட அதிர்ச்சி அடையாமல் முடிந்தவரை அவர்களின் தாக்குதலைத் தடுக்க முயன்றார். இந்த அமளியில் ஒரு நபர் காயமடைந்தார்.
அந்தக் கும்பல் ரஞ்சித்தையும், அவரது மனைவியையும் இனவெறி வார்த்தைகளால் ஏசினர். பின்னர் இந்த நாட்டை விட்டு ஓடிப் போய் விட வேண்டும் என்று மிரட்டினர்.
அந்த சமயத்தில் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது அமளியில் காயமடைந்து கிடந்த நபரை தங்களது வாகனத்தில் ஏற்றி வீட்டில் கொண்டு போய் விட்டனர்.
கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் இந்த அமளி நீடித்துள்ளது. ரஞ்சித் ஒரு கராத்தே சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து ரஞ்சித் கூறுகையில், சமீபத்திய தாக்குதல்களை நான் இனவெறித் தாக்குதலாகவே நினைக்கவில்லை - எனக்கு நடப்பது வரை. ஆனால் இப்போது முழுமையாக நம்புகிறேன், இது நிச்சயம் இனவெறி தாக்குதல்தான்.
நான் நான்கு முறை போலீஸாரின் உதவியை நாடினேன். ஆனால் அவர்கள் முட்டாள்தனமான கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தனரே ஒழிய வருவதாக தெரியவில்லை.
கடைசியில் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. என்னைக் கொல்லப் போகிறார்கள், நான் என்ன செய்யட்டும் என்று கேட்ட பின்னர்தான் அவர்கள் வந்தனர். ஒருவேளை அவர்கள் வந்திராவிட்டால் நிச்சயம் நான் கொல்லப்பட்டிருப்பேன் என்றார்.
ஆஸ்திரேலியாவில் ரஞ்சித் தம்பதியினர் தங்களது இரு குழந்தைகளுடன் கடந்த 19 வருடங்களாக வசித்து வருகின்றனர். அக்கம்பக்கத்தில் வசிப்போர் இந்தத் தம்பதி மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளனர்.
இவர்களுக்கு நடந்த தாக்குதல் குறித்து அவர்கள் கோபமடைந்துள்ளனர். ஜோடி பர்போர்ட் என்பவர் கூறுகையில், இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. எனக்கு மிகவும் வெட்கமாக உள்ளது. அவர்களது வீட்டை சூறையாடியுள்ளனர். இது நிச்சயம் இன வெறித் தாக்குதல்தான் என்றார்.
ரஞ்சித் மேலும் கூறுகையில், நாங்கள் மீண்டும் வருவோம், உன்னைக் கொல்லாமல் விட மாட்டோம் என்று அந்தக் கும்பல் மிரட்டியுள்ளது. எனவே எனது குடும்பத்தினருக்கு நிச்சயம் ஆபத்து உள்ளது. ஆனால் போலீஸார் பாதுகாப்பே தராமல் உள்ளனர். எனது குடும்பத்தினரைக் காக்க நான் ஏதாவது செய்தாக வேண்டும்.
ஆனால் நான் நிச்சயம் இங்கிருந்து வெளியேற மாட்டேன். நான் ஒரு ஆஸ்திரேலியக் குடிமகன். நான் ஏன் போக வேண்டும். வந்தால் வரட்டும், கொன்றால் கொல்லட்டும், கவலைப்படவில்லை என்றார் ரஞ்சி்த்.