கன்னடப் பத்திரிக்கைக்கு நான் கட்டுரையே எழுதவில்லை - தஸ்லிமா மறுப்பு
தஸ்லிமா நஸ்ரின் புர்கா குறித்து எழுதியதாக கன்னட நாளிதழ் ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. இது அங்கு பெரும் வன்முறையை ஏற்படுத்தி விட்டது.
ஷிமோகாவில் நடந்த மோதலின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
இந்த நிலையில் தான் அப்படி ஒரு கட்டுரையே எழுதவே இல்லை என்று மறுத்துள்ளார் தஸ்லிமா. இதுகுறித்து டெல்லியில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக செய்தித் தாள் ஒன்றில் வெளியாகியுள்ள கட்டுரை திரித்து வெளியிடப்பட்டதாகும். அந்தக் கட்டுரையை நான் எழுதவே இல்லை.
கர்நாடகத்தைச் சேர்ந்த எந்த நாளிதழுக்கும் நான் எந்தக் கட்டுரையும் எழுதவில்லை. கர்நாடக சம்பவம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நான் எழுதிய ஒரு கட்டுரையால் கர்நாடகத்தில் பெரும் வன்முறை மூண்டுள்ளதாக அறிய வந்து அதிர்ச்சியுற்றேன். ஆனால் அப்படி ஒரு கட்டுரையை எனது வாழ்நாளில் எழுதியதே இல்லை. குறிப்பாக கர்நாடகத்தைச் சேர்ந்த எந்த நாளிதழுக்கும் நான் அப்படி ஒரு கட்டுரையை தரவில்லை.
ஆனால் நான் எழுதியதாக கூறி வெளியாகியுள்ள அந்தக் கட்டுரை மிகவும் கண்டனத்துக்குரியது. மேலும், நான் இதுவரை எழுதிய நூல்களில் எந்த இடத்திலும் புர்காவுக்கு எதிராக நபிகள் நாயகம் கருத்து கொண்டிருந்தார் என்று நான் கூறியதே இல்லை. எனவே இது ஒரு தவறான கட்டுரையாகும்.
எனது பெயரைக் கெடுக்க வேண்டும், எனது படைப்புகள் குறித்த தவறான கருத்தை உருவாக்க வேண்டும், நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் சமூகத்தில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்த முயற்சியாகவே இதைக் கருதுகிறேன்.
வன்முறை மூண்ட பகுதிகளில் அமைதி திரும்ப வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார் தஸ்லிமா.
வங்கதேசத்திலிருந்து வெளியேறிய பின்னர் இந்தியாவில்த தங்கியுள்ளார் தஸ்லிமா. இடையில், வெளிநாடு சென்றிருந்த அவர், கடந்த மாதம்தான் இந்தியா திரும்பி வந்தார். பாதுகாப்பு காரணத்திற்காக அவர் ரகசியமான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். வருகிற ஆகஸ்ட் மாதம் வரை அவரது விசா நீட்டிக்கப்பட்டுள்ளது.