For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தஸ்லிமா நஸ்ரின் கட்டுரை: கர்நாடகத்தில் பயங்கர வன்முறை-2 பேர் பலி-ஷிமோகாவில் ஊரடங்கு

By Staff
Google Oneindia Tamil News

Hassan Violence
பெங்களூர்: வங்காள தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் எழுதிய கட்டுரையை இரு கன்னட நாளிதழ்கள் வெளியிட்டதையடுத்து கர்நாடகத்தின் ஷிமோகா மற்றும் ஹாசன் மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் பலியானார்.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இன்னொருவர் பலியாயினர்.

கன்னட நாளிதழ்களில் வெளியான தஸ்லிமாவின் புர்கா குறித்த கட்டுரையை கண்டித்து ஷிமோகாவில் நேற்று கண்டன ஊர்வலம் நடந்தது.

இந்த ஊர்வலத்தில சென்ற ஒரு சிலர் கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசியதையடுத்து வன்முறை வெடித்தது. இதையடுத்து ஊர்வலம் சென்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

ஆனாலும் கூட்டத்தைக் கலைக்க முடியாததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஊர்வலத்தினர் கல்வீசி தாக்கியதில் இன்னொருவர் பலியானார்.

இந்த சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அதேபோல ஹாசன் நகரிலும் கண்டன ஊர்வலம் நடந்தது. இந்த கண்டன ஊர்வலத்துக்கு எதிராக இன்னொரு தரப்பினரும் ஊர்வலம் நடத்தியதையடுத்து இரு பிரிவினர் இடையே மோதல் மூண்டது.

இதில் பல கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து கலவரக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதோடு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர். இந்த மோதலில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வன்முறை தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறையையடுத்து ஷிமோகாவில் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹாசன் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரிலும் வன்முறை பரவுவதை தடுக்க நகர் முழுவதும் வரும் வெள்ளிக்கிழமை முடிய 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


சம்பந்தப்பட்ட கன்னட நாளிதழ்களின் அனைத்து அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து 30 மாவட்டங்களிலும் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் அமைதி காக்க எதியூரப்பா வேண்டுகோள்:

இந் நிலையில் மக்கள் அமைதி காக்குமாறு முதல்வர் எதியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஷிமோகா, ஹாசனில் நடந்த வன்முறை தொடர்பாக சட்டசபையில் நடந்த விவாதத்துக்கு பதிலளித்த எதியூரப்பா,

வெளிநாட்டு பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் முஸ்லீம் சமுதாயத்தை பற்றி எழுதியதை, கன்னட பத்திரிகை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இந்த செய்தி வந்த உடனே அனைத்து மாவட்டங்களிலும் போலீசை உஷார்படுத்தும்படி கலெக்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தேன்.

இந் நிலையில் ஹாசனில் காலை 11.30 மணி அளவில் 10 ஆயிரம் முதல் 15,000 முஸ்லிம்கள் பத்திரிகையில் வந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஊர்வலம் நடத்தினர். அப்போது இன்னொரு பிரிவினரின் கடைகள் மீது கல்வீசி தாக்கினர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.

இதே பிரச்சனையால் ஷிமோகாவிலும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றார்.

இந் நிலையில் முதல்வர் எதியூரப்பா நேற்றிரவு தனது இல்லத்தில் மாநில சட்டம்-ஒழுங்கு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், எந்த ஒரு மதத்தின் நம்பிக்கைக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இந்த அரசு நடந்து கொள்ளும். வன்முறை சம்பவத்துக்காக காரணமான 2 பத்திரிகைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் முஸ்லீம் மக்கள் அமைதி காக்க வேண்டும்.

சட்டம்-ஒழுங்கை கையில் எடுப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். இந்த சம்பவத்தை தொடர்ந்து சில அமைப்புகள் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. எக்காரணம் கொண்டும் பந்த் நடத்த அனுமதி தரப்படாது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X