வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதா?-ஜெயலலிதா
கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வெடுத்து வரும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியை குறைப்பதே மத்திய, மாநில அரசுகளின் தலையாய பணியாக தற்போது இருக்க வேண்டும். இது போன்ற தருணத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு மீண்டும் உயர்த்தி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டு காலமாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், காய்கறிகள், பால் உட்பட அனைத்துப்பொருட்களின் விலைகளும் பன்மடங்கு உயர்ந்து கொண்டே செல்கின்றன.
விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்ததன் அடிப்படையில், 25.2.2010 அன்று விலைவாசி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதமே நடைபெற்றது.
இந்தச் சூழ்நிலையில், விலை வாசியை கட்டுப்படுத்துவது குறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் என்று இந்திய நாடே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், பெட்ரோல், டீசல் மீதான சுங்கவரி மற்றும் கலால் வரி ஆகியவற்றை மத்திய அரசு உயர்த்தியது, எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் உள்ளது.
இதன் விளைவாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.77 அளவிலும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 2.55 அளவிலும் உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வினையடுத்து, லாரி, ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களுக்கான கட்டணங்கள் இருபது சதவீதம் வரை உயர்ந்து விட்டன.
பதுக்கல், கடத்தல் தொழில்கள் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ள சூழ்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயராத நிலையில், இது போன்ற விலை உயர்வு கண்டிக்கத்தக்கது.
எனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி மற்றும் கலால்வரி ஆகியவற்றை உயர்த்தியுள்ள மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு உறுதுணையாக உள்ள திமுக அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், வரும் 6ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும்,
அதிமுக கழக அமைப்புகள் செயல்பட்டு வரும் பிற மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் முன்னிலை வகிப்பார்கள்.
இந்தக் ஆர்ப்பாட்டத்தில் பொது மக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்:
மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மீனாட்சி பஜார் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.