பென்னாகரம் இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் துவங்கியது
தர்மபுரி: பென்னாகரம் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கியது.
இத் தொகுதியில் மார்ச் 27ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
வேட்பு மனுக்களை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான அமுதாவிடம் கலெக்டர் அலுவலகத்திலும் பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் டியூக் பொன்ராஜ் ஆகியோரிடமும் தாக்கல் செய்யலாம். தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மனுதாக்கல் செய்யலாம்.
முதல் நாளான இன்று அரசியல் கட்சி வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. மேட்டூரைச் சேர்ந்த பத்மராஜன் என்பவர் கின்னஸ் சாதனைக்காக 109வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவரைத் தொடர்ந்து திருவண்ணாமலையைச் சேர்ந்த மனிதன் என்பவர் பின்னோக்கியே நடந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர்கள் தவிர மேலும் 2 சுயேட்சைகளும் மனுத் தாக்கல் செய்தனர்.
அதிமுக வேட்பாளர் அன்பழகன் நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்.
திமுக வேட்பாளர் இன்பசேகரன், பாமக வேட்பாளர் தமிழ்க்குமரன், தேமுதிக வேட்பாளர் காவேரிவர்மன் ஆகியோர் வரும் 5ம் தேதி மனு தாக்கல் செய்கின்றனர்.
மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 10ம் தேதியாகும். 11ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். 13ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம். 13ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் பிரசாரம் சூடு பிடிக்கும். 27ம் தேதி வாக்குப் பதிவும், 30ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
இந்தத் தொகுதியில் நான்கு முனைப் போட்டியாக இருந்தாலும் கூட இப்போதைக்கு திமுக, பாமக இடையில்தான் கடும் போட்டி நிலவுகிறது.
அதிமுகவுக்கு வன்னியர் கூட்டமைப்பு ஆதரவு:
இந் நிலையில் இந்த இடைத் தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதாக வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், அருந்ததியர்களுக்கு வழங்கியதை போலவே வன்னியர்களுக்கும் தனி உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சமூக நீதி போராட்டங்களில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறோம். ஆனால் இதுவரையில் எங்களுக்கு பதில் இல்லை.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எங்களின் கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்த பிறகு பரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் அமைச்சரவையில் வன்னியர்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனால் நாங்கள் பென்னகரம் இடைத்தேர்தலில் அதிமுகக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இருக்கிறோம் என்றார்.