ஆட்சிக்காலமே முடியப் போகிறது, இனி பங்கு கேட்டு புண்ணியம் இல்லை- எஸ்.ஆர்.பி.
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகி விட்டது. இந்த நிலையில் ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்று நாம் கேட்பது எந்தப் பலனையும் தராது என்று மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், ஜி.கே.வாசனின் தீவிரவாத ஆதரவாளர்களில் ஒருவருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மக்கள் பிரச்னைகளுக்காக போராட வேண்டும். காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த கட்சியினர் பாடுபட வேண்டும். மேலும், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இனி ஆட்சியில் பங்கு கேட்டு பயனில்லை.
"நாம் தமிழர்' என்ற இயக்கத்தை தொடங்கியுள்ள இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். தமிழகத்தில் உள்ள வட இந்தியர்களை விரட்ட வேண்டும் என்றெல்லாம் பேசிவரும் அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்.
திமுக பொதுக்குழுவில் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றியதில் எந்தத் தவறும் இல்லை.
முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரள அரசின் செயல்பாடுகள் இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளது. அதனைத் தடுத்து நிறுத்தாவிட்டால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்.
உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள ஐவர் குழுவில் இடம் பெறாததால் தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றார் எஸ்.ஆர்.பி.