வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம் முதலிடம்!
மத்திய பட்டு வாரிய செய்தி மற்றும் விளம்பரப் பிரிவு இணை இயக்குனர் சம்பத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்தியாவில் 51 ஆயிரம் கிராமங்களில், 63 லட்சம் பேர் பட்டு புழு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம், சட்டீஸ்கர், பீகார், மகாராஷ்டிரா, ஒரிசா மாநிலங்களில் உள்ள வனப்பகுதியில் அதிகளவு பட்டுக்கூடுகள் வளர்க்கப்படுகின்றன.
இங்கிருந்து கிடைக்கும் வனப்பட்டு தனிசிறப்பு பெற்றது. அதே போன்று அசாமில் கிடைக்கும் மூகா ரக பட்டு தங்க ஜரிகை தயாரிக்க பயன்படுகிறது.
மல்பெரி மற்றும் மூகா ரக பட்டை சேர்த்து தயாரிக்கும் சேலைகள், தலா 6,000 முதல் 7,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சமீபகாலமாக இரி பட்டு எனப்படும் அகிம்சா பட்டு தயாரிப்பும் அதிகரித்துள்ளது. இந்த பட்டு தொழிற்சாலை அமைப்பவர்களுக்கு, மத்திய அரசு 75 சதவீத மானியம் தருகிறது.
இந்தியாவில், ஆண்டுக்கு 18 ஆயிரம் டன் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், மேற்குவங்கத்தில் அதிகளவு வெண்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
தேசிய அளவில் உடுமலைப்பேட்டை முதலிடமும், பழநி இரண்டாம் இடமும் பெற்றுள்ளது. அதே சமயம், சீனாவில் இருந்து ஆண்டுக்கு 10 ஆயிரம் டன் வெண்பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது.
இதற்கான செலவை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கிராமப்புறங்களில் பட்டு உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்து, 650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள உடுமலை, காங்கேயம், திண்டுக்கல், பழநி, தாராபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களில் வெண்பட்டு உற்பத்திக்கு இயற்கை சூழல் உதவுகிறது.
இதனால், இந்த பகுதிகளில் வரும் ஆண்டுகளில் வெண்பட்டு சார்ந்த தொழிற்சாலைகள் அதிக அளவில் அமைய வாய்ப்பு உள்ளது' என்றார்.