அதிமுக வேட்பாளர் அன்பழகன் வேட்பு மனு தாக்கல்
தர்மபுரி: பென்னாகரம் இடைத் தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளர் அன்பழகன் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
முதல் நாளான நேற்று 7 சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனர்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 பேரும், பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 4 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதில் 108 முறை போட்டியிட்டுள்ள சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த கே.பத்மராஜன் (59), குடியரசுத் தலைவர் ஆகும் வரை பின்னோக்கி நடப்பதாகக் கூறும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அக்ரஹாரத்தைச் சேர்ந்த மணிதண் (மனுவில் பெயர் இப்படித்தான் உள்ளது) ஆகியோரும் அடங்குவர்.
இந்த மணிதண் டெபாசிட் தொகையான ரூ.10,000த்தை செலுத்தவில்லை. "மணிதண்'' என்று பெயர் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்த தேர்தல் அலுவலர், மனிதனுக்கு '2 சுழி னி' தானே போடவேண்டும். நீங்கள் '3 சுழி ணி' போட்டுள்ளீர்களே என்று கேட்டார்.
அதற்கு அவர் 'நான் எழுதும் போது 4 சுழி போடுவேன். ஆனால், டைப்ரைட்டிங்கில் 4 சுழி இல்லை. அதனால் தான் 3 சுழியோடு நிறுத்திட்டேன்!' என்றார்.
உங்கள் வயது என்ன என்று கேட்டதற்கு, 1 கோடியே 14 லட்சத்து 26 ஆயிரத்து 668 நிமிடங்கள் என்று எடக்கு மடக்கான பதிலைத் தந்தார்.
கழுதைகளுடன் வந்த வேட்பாளர்:
கோவை மாவட்டம் சுந்தராபுரத்தைச் சேர்ந்த ஏ.நூர் முகம்மது என்பவர், இரண்டு கழுதைகளுக்கு மாலை அணிவித்து கூட்டி வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவரை பென்னாகரம் டி.எஸ்.பி. பஞ்சவர்ணம், வட்டாட்சியர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர் கழுதைகளை வெளியிலேயே நிறுத்திவிட்டு வந்து மனு தாக்கல் செய்தார்.
கழுதைகளை போல மக்களுக்காக உழைப்பேன் என்பதைச் சொல்லவே இப்படி வந்தாராம்!.
'அம்மா' செயல்பாடுகளை கூறி வாக்கு சேகரிப்போம்:
இந் நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் அன்பழகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மாவின் செயல்பாடுகளைக் கூறி வாக்கு சேகரிப்போம். இந்தத் 40,000 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என்றார்.
திமுக வேட்பாளர் இன்பசேகரன், பாமக வேட்பாளர் தமிழ்க்குமரன், தேமுதிக வேட்பாளர் காவேரிவர்மன் நாளை மனு தாக்கல் செய்கின்றனர்.
நரேஷ் குப்தாவிடம் அன்புமணி புகார்:
இந் நிலையில் பென்னாகரம் தொகுதியில் அரசு ஊழியர்கள் மாற்றப்பட்டது குறித்து தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவிடம் பாமக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அன்புமணி கூறுகையில், பென்னாகரத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்பது அனைவரின் எண்ணம் ஆகும். அப்படி அங்கு தேர்தல் நடத்தப்பட்டால் பாமக வெற்றி பெற்று விடும்.
பென்னாகரம் தொகுதியில் உள்ள அரசு ஊழியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இது பற்றி நான் சென்னையில் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் நேரில் புகார் செய்தேன்.
பென்னாகரம் தொகுதியில் படித்த இளைஞர்கள் பெங்களூருக்கும், ஓசூருக்கும் வேலை தேடி செல்கிறார்கள். எனவே அவர்களுக்கு சொந்த ஊரில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றார்.
நவீன திமுக தேர்தல் அலுவலகம்:
இந் நிலையில் பென்னாகரம் இடைத் தேர்தலுக்காக கம்ப்யூட்டர்கள் அடங்கிய திமுக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல், கட்சி நிர்வாகிகள், அவர்களின் தொலைபேசி எண்கள், கடந்த தேர்தலில் ஒவ்வொரு பூத்திலும் ஒவ்வொரு கட்சியும் பெற்ற ஓட்டுகளின் எண்ணிக்கை போன்ற விவரங்களை உடனுக்குடன் டச் ஸ்கீரின் பெறும் வகையில் இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
12 ஓட்டுச் சாவடிகள் இட மாற்றம்:
இந் நிலையில் பென்னாகரம் தொகுதியில் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 12 ஓட்டுச் சாவடிகளை வேறு இடங்களுக்கு மாற்ற மத்திய தேர்தல் கமிஷனிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார்.
தேர்தல் நடக்கும் நேரத்தில் பள்ளி பொதுத் தேர்வுகள் நடக்க இருப்பதால் மாணவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாத வகையில், தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில் உள்ள 12 ஓட்டுச் சாவடிகளை வேறு இடங்களுக்கு மாற்ற அனுமதி கோரப்பட்டுள்ளது என்றார்.