புதிய தலைமைச் செயலகம்- ரூ. 14 கோடியில் நான்கு வழிச் சாலை
சென்னை: புதிய தலைமைச் செயலக வளாகத்தைச் சுற்றிலும் ரூ. 14 கோடிகளை செலவிட்டு நான்கு வழிப் பாதை, பூங்கா, பெரிய புல்வெளிகள் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன.
ரூ. 450 கோடி செலவில் புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த தலைமைச் செயலகத்தைச் சுற்றிலும் உள்ள சாலைகளை விரிவுபடுத்தி நான்கு வழிப் பாதைகளாக மாற்றவுள்ளனர்.
அதன்படி, அண்ணா சிலை முதல் மேம்பால ரயில் பாலம் வரை உள்ள அண்ணா சாலை, தூர்தர்ஷன் அலுவலகம் உள்ள சுவாமி சிவானந்தா சாலை உள்ளிட்ட 9,600 சதுர அடி பரப்பில் சர்வதேச தரத்தில் போக்குவரத்து வசதிகள் ரூ. 5 கோடியில் மேம்படுத்தப்படும்.
இந்தச் சாலைகள் அனைத்தும் 19 மீட்டர் அகலமுடையதாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. சாலையோரங்களின் இருபுறமும் தலா 2 மீட்டர் அகலமுள்ளதாக பிளாட்பாரம் ரூ. 74 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளன.
தார்ச்சாலைகள் அமைக்க ரூ. 1.11 கோடி, நடைபாதை அமைக்க ரூ. 30 லட்சம், சாலை மைய மேம்பாடுக்கு ரூ. 50 லட்சம், சென்னை தொலைக்காட்சி அருகே பக்கிங்ஹாம் கால்வாய் பாலம் சீரமைப்புக்கு ரூ. 85 லட்சம்.
மழைநீர் வடிகால் வசதிக்கு 15 லட்சம், 68 மின் விளக்குகள் நிறுவ ரூ. 48 லட்சம், கூவம் கரை மேம்பாடு, புல்வெளி அமைத்தலுக்கு ரூ. 43 லட்சம் என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வாலாஜா சாலையை 310 மீட்டர் நீளமும், 29 மீட்டர் அகலமும் கொண்ட 4 வழிப் பாதையாக மாற்ற ரூ. 9 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சாலையின் இரு இடங்ளில் லிப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பாலங்களும் வரவுள்ளன.
அழகுக்கு அழகு சேர்க்கும் சுடுமண் சிற்பங்கள்
இதுதவிர தலைமைச் செயலகத்தில் முதல்வர் வளாகத்தின் முன்பகுதிச் சுவரில் வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை, தஞ்சை பெரிய கோயில் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், டெரகோட்டா எனப்படும் சுடுமண்ணால் சிற்பங்களையும் சுவரில் பதித்து வருகின்றனர்.
அண்ணாசாலையில் பெரியார் சிலை எதிரே உள்ள அரசினர் தோட்டத்தின் நுழைவு வாயில் வழியே சென்றால் முதல்வர் வளாகம் வரும்.
வளாகத்துக்குள் நுழைந்ததும் முன்பகுதியில் உள்ள சுவர்களில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஓவியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
முன்பகுதியில் உள்ள சுவரின் இடதுபுறத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில், கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவர் சிலை ஆகியவற்றின் மாதிரி வடிவங்கள் சுடுமண் சிற்பங்களாக பதிக்கப்பட்டு வருகின்றன.
இதே போன்று, வலதுபுறத்தில் வள்ளுவர் கோட்டம், டைடல் பூங்கா ஆகியவற்றின் மாதிரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில், வள்ளுவர் கோட்டம் தத்ரூபமாக சுடுமண்ணால் செய்யப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது. இதை, முதல்வர் கருணாநிதி அண்மையில் பார்வையிட்டார். அப்போது, வள்ளுவர் கோட்ட தேர் மாதிரி வடிவத்தின் மேற் கூரையில் சிறு திருத்தம் செய்யுமாறு கூறியுள்ளார்.
சட்டப் பேரவைக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் பணிகள் நிறைவடையும் எனத் தெரிகிறது.