பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இல்லை-சோனியா!
டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு தனது முடிவில் இருந்து பின்வாங்காது என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.
2010-11ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வரிகளை உயர்த்தியதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, காங்கிரசின் கூட்டணிக் கட்சிகளான திமுக மற்றும் திரிணமூல் காங்கிரசும் வலியுறுத்தி வருகின்றன.
எனினும், பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை என ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
எனினும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி நேற்று சென்னையில் பேட்டி அளிக்கையில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது.
கூட்டத்திதில் பேசிய சோனியா, நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி தாக்கல் செய்த 2010-11 பட்ஜெட் குறித்து பாராட்டிப் பேசினார்.
காங்கிரஸ் கட்சி, உணவுப் பொருட்கள் மீதான விலை உயர்வு தான் பிரதான பிரச்சனையாக கருதுகிறது என்று சோனியா குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வுக்கான காரணங்கள் குறித்தும், நிதியமைச்சர் நிலைமையை சாதுர்யமாக கையாண்ட விதம் குறித்தும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என சோனியா எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற இயலாது என்பதை சூசகமாக உணர்த்தும் விதமாகவே அவரின் பேச்சு அமைந்தது என்று காங்கிரஸ் எம்.பிக்கள் தெரிவித்தனர்.
மேலும், எம்.பி.க்கள் மத்தியில் பேசிய நிதியமைச்சர் பிரனாப், 'பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றம் தவிர்க்க முடியாதது.
சில தீர்க்கமான முடிவுகளை, சில நேரங்களில் எடுத்தே ஆகவேண்டும். அந்த நேரம் இப்போது வந்துள்ளது.
நாட்டின் நிதி நிலையை சீர் செய்ய இந்த மாற்றங்களை செய்த தீரவேண்டும். விலை குறைத்தால் மக்கள் மத்தியில் செல்வாக்கை கூட்டலாம். ஆனால் நிதி நிலைமைக்கு நல்லதல்ல' என்றார்.
சோனியா காந்தி முன்னிலையில் பிரனாப் தெரிவித்த இக்கருத்துக்களின் மூலம், பெட்ரோல் டீசல் விலை விவகாரத்தில் மத்திய அரசின் நிலை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.