செம்மொழி மாநாடு: கோவைக்கு 100 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்
சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கோவைக்கு 100 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு வரும் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் மாநாட்டுக்கு வர உள்ளனர்.
இதனால், மாநாட்டை ஒட்டி கோவைக்கு சிறப்பு ரயில்களை இயக்கவேண்டும் என ரயில்வே துறைக்கு தமிழக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு ஏற்கெனவே கோடை கால சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து கோவைக்கு உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பு விரைவு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் இருந்து தினசரி இயக்கப்படும் முக்கிய ரயில்கள், கோடை சிறப்பு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து என கோவை வழித்தடத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது.
கோவை - இருகூர் இடையிலான அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்த பின்னரே கோவை உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு சிறப்பு விரைவு ரயில்களை இயக்க முடியும் என்று தமிழக அரசிடம் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.