உத்தரப் பிரதேசம்: கோயிலில் கூட்ட நெரிசலில் சி்க்கி 60 பக்தர்கள் பலி
பிரதாப்கார் (உ.பி): கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 60 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், பிரதாப்கார் நகரில் ராம்ஜானகி கோயில் உள்ளது. கிரிபால்ஜி மஹராஜ் என்ற சுவாமிஜிக்கு சொந்தமானது இந்த கோவில்.
இங்கு கோயிலின் சம்பிரதாய நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக பக்தர்களுக்கு இலவசமாக துணிகள் வழங்கப்பட்டது.
சுவாமிஜி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் துணிகளை வினியோகம் செய்தார். இவற்றை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டிருந்தனர்.
பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு கூடிய நிலையில், கோயிலின் கதவு ஒன்று உடைந்து விழுந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தும், ஏறி மிதித்துக்கொண்டும் ஓடினர்.
சிறுவர்கள், முதியோர் கூட்டத்தில் சிக்கி திணறினர். பலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர்.
தகவல் அறிந்ததும் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய பலர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த கூட்ட நெரிசலில் மொத்தம் 60 பேர் பலியானதாகவும், மேலும் ஏராளமான பேர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவதாக போலீசார் தெரிவித்தனர்.