நாங்கள் அதிமுக எம்எல்ஏக்களாகத் தான் உள்ளோம்: சபாநாயகரிடம் விளக்கம்
சென்னை: கட்சித்தாவல் சட்டப்படி பதவி நீக்கம் செய்யுமாறு அதிமுகவால் கோரப்பட்ட இரு எம்எல்ஏக்களும் இன்று சபாநாயகர் ஆவுடையப்பனை நேரில் சந்தித்து விளக்கக் கடிதம் அளித்தனர்.
அதிமுக எம்எல்ஏக்களான ஜெயங்கொண்டம் ராஜேந்திரன், கோவில்பட்டி ராதாகிருஷ்ணன் ஆகியோர் சமீபத்தில் நடந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதையடுத்து 2 எம்எல்ஏக்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இருவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி 51 அதிமுக எம்எல்ஏக்களும் நேற்று சட்டமன்ற செயலாளர் செல்வராஜை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.
இந் நிலையில் இன்று ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் இருவரும் சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கக் கடிதம் அளித்தனர்.
அதில், நாங்கள் அதிமுக எம்எல்ஏக்களாகத் தான் உள்ளோம். அதிமுகவில் தொடரவே விரும்புகிறோம். உட்கட்சிப் பூசல் காரணமாகவே எங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
இது குறித்து சபாநாயகர் ஆவுடையப்பன் கூறுகையில், கோவில்பட்டி எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறி விட்டதாகவும், அவர்கள் மீது கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா செங்கோட்டையன் என்னிடம் மனு கொடுத்தார்.
இதையடுத்து, 2 எம்எல்ஏக்களும் 8ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை ஏற்று எம்.எல்.ஏக்கள், ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் இன்று விளக்க மனுக்களை என்னிடம் கொடுத்துள்ளனர்.
அதில் 2 பேரும் அதிமுகவில் நீடிப்பதாகவும், கட்சியில் உள்ள கோஷ்டி பூசல் காரணமாக தங்களைப் பற்றி மனு கொடுத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அமைச்சர்களை நேரில் சந்தித்து தொகுதி பற்றிய குறைகளை கூறுவதற்காகவே தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விளக்க மனு ஆய்வில் உள்ளது என்றார்.