பென்னாகரம் தேர்தல்: அதிமுகவுக்கு வழக்கம்போல் மறைமுக ஆதரவு-பாஜக திட்டம்
சென்னையில் இன்று நடக்கும் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதி இடைத் தேர்தல்களை பாஜக புறக்கணித்தது. பாஜக உட்கட்சித் தேர்தல் நடப்பதால், தேர்தலை புறக்கணிப்பதாக ஒரு உப்பு சப்பில்லாத காரணத்தை அந்தக் கட்சி கூறியது. உண்மையான காரணம், தேர்தலில் போட்டியிட்டால் அதன் உண்மை 'பலம்' வெளியில் தெரிந்துவிடும் என்பு தான்.
இந்நிலையில் பென்னாகரம் இடைத் தேர்தலையும் புறக்கணிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். ஆனால், அதற்கான காரணத்தைக் கூறவில்லை.
இதற்கிடையே இடைத்தேர்தலை புறக்கணிக்காமல் அதிமுகவை ஆதரிக்கலாம் என்று முன்னாள் தலைவரான இல.கணேசன் மற்றும் ஒரு பிரிவினர் கூறி வருவதாகத் தெரிகிறது.
ஆனால், தங்களிடம் அதிமுக ஆதரவே கோராத நிலையில் எப்படி நாமாகப் போய் ஆதரவைத் தெரிவிப்பது என்று பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் இன்னொரு பிரிவினர் யோசிப்பதாகத் தெரிகிறது.
பாஜக ஆதரவைக் கோரினால் அதுவே தங்களுக்கு ஆபத்தாக முடியும் என அதிமுக கருதுகிறது.
இதனால் பாஜக ஆதரவு அளித்தாலும் அதை நான் கேட்கவே இல்லையே என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளிப்படையாக சொல்லி மானத்தை வாங்கவும் வாய்ப்புள்ளது.
இதையடுத்து என்ன தான் செய்வது என்பது குறித்து முடிவெடுக்க இன்று மாநில நிர்வாகிகள் கூட்டத்தை பாஜக கூட்டியுள்ளது.
இதில் வழக்கம்போல் அதிமுகவுக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஏதாவது முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.