பென்னாகரம்-திமுக, பாமக, தேமுதிக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
தர்மபுரி: பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, பாமக, தேமுதிக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இங்கு வரும் 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 7 சுயேச்சைகள் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
நேற்று அதிமுக வேட்பாளர் அன்பழகன், அவரது மாற்று வேட்பாளராக வேலுமணி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந் நிலையில் இன்று திமுக வேட்பாளர் இன்பசேகரன், பாமக வேட்பாளர் தமிழக்குமரன், தேமுதிக வேட்பாளர் காவேரிவர்மன் ஆகியோர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தேர்தல் அதிகாரியும் மாவட்ட வருவாய் அதிகாரியுமான மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
முன்னதாக திமுக வேட்பாளருடன் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், எ.வ.வேலு, தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வகணபதி மற்றும் நிர்வாகிகள் இன்று காலை பென்னாகரத்தில் உள்ள பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் தர்மபுரியில் உள்ள அண்ணா, அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இன்பசேகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதே போல பாமக வேட்பாளர் தமிழ்க்குமரன், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே. மணி மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் பென்னாகரத்திலும் தர்மபுரியிலும் உள்ள பெரியார், அம்பேத்கர், காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு மனு தாக்கல் செய்தார்.
தேமுதிக வேட்பாளர் காவேரிவர்மனுடன் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோருடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இன்று முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததால் தர்மபுரி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.