நாடாளுமன்றம்-சட்டசபையில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு: மத்திய அரசு திட்டம்
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை உள் ஒதுக்கீடு ஏதுமின்றி நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கட்சிகளைச் சமாதானப்படுத்தும் நோக்கில் இந்த யோசனையை மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனால் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை, நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய மொய்லி,
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது.
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தும் கட்சிகள், முதலில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு ஆதரவளிக்க வேண்டும்.
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என அவர்கள் உண்மையிலேயே விரும்பினால், முதலில் இரு அவைகளிலும் பிற்படுத்தப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க தேசிய கருத்தொற்றுமையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
அதை விட்டுவிட்டு மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவில் உள் ஒதுக்கீடு கோருவது சரியல்ல என்றார்.
இதற்கிடையே வரும் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தின் நூற்றாண்டு நாள் என்பதால், அன்றைய தினமே மகளிர் இட ஒதுக்கீட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்த விஷயத்தில் லாலு, முலாயமின் ஆதரவைப் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.