நேரு கொண்டுவந்த நதி நீர் வாரிய சட்டத்தை அமல்படுத்துங்கள்: பழ.நெடுமாறன்
மதுரை: கடந்த 1956ம் ஆண்டில் நேரு பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்ட நதி நீர் வாரிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறம் வலியுற்றுத்தி உள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழு கூட்டம் மதுரை கே.கே.நகரில் உள்ள கிருஷ்ண அய்யர் அரங்கில் பழ.நெடுமாறன் தலைமையில் நேற்று நடந்தது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 5 மாவட்ட பாசன சங்கத்தின் தலைவர் அப்பாஸ் உள்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்கள்.
கூட்டத்தின் முடிவில் பழ.நெடுமாறன் அளித்த பேட்டி: முல்லைப் பெரியாறு, செண்பக ஆறு, நெய்யாறு, பாம்பாறு என பல்வேறு வகையில் தமிழக விவசாயிகளின் எதிர்காலத்தை நாசமாக்கி வருகிறது கேரள அரசு.
இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்படும் கேரள அரசை மத்திய அரசு கண்டிக்கவில்லை. உச்சநீதிமன்ற வழக்கிலும் நமக்கு நீதி கிடைக்கவில்லை. எனவே தமிழக விவசாயிகள் ஒன்றுபட்டு போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
கேரளாவின் இந்த பிடிவாதத்தால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே, வருகிற மே மாதம் 28ம் தேதி கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள கேரளாவிற்கு செல்லும் 13 ரோடுகளில் மறியல் பேராட்டம் நடைபெறும்.
இந்த போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், சங்கங்கள், தங்கள் ஆதரவை அளிக்க வேண்டும்.
அரசியல் சார்பற்ற இந்த பேராட்டத்தில் அனைவரும் பங்கு பெற வேண்டும். காவிரி பிரச்சினையில் அனைவரும் ஒன்று பட்டு இருப்பது போல, முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் நாம் அனைவரும் ஒன்று பட்டு இருக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் நமது தரப்பு நியாயத்தை தெளிவுபடுத்த தமிழக அரசு தவறி விட்டது. அதனை மறைக்க பல்வேறு காரணங்கள் சொல்கிறார்கள்.
1956ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த போது நதி நீர் வாரிய சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த சட்டம் இது வரை அமல்படுத்தபடாத நிலையில் இருக்கிறது.
அந்த சட்டத்தை அமுல்படுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகள் பதவி விலக வேண்டும்" என்றார்.