ஏற்காடு மலையில் விஷமிகள் வைத்த தீ: போராடி அணைத்தனர் வன ஊழியர்கள்
சேலம்: ஏற்காடு மலையில், விஷமிகள் சிலர் தீ வைத்து விட்டனர். இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து கடுமையாகப் போராடி அதை அணைத்தனர். இதன் மூலம் பெரும் காட்டுத் தீ ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதை 20ம் கொண்டை ஊசி வளைவில், அதிக அளவில் மரங்கள் இலை உதிர்ந்து காய்ந்துள்ளன. அவை, விஷமிகள் சிலரது செயலால் தீப்பற்றிக் கொண்டன.
காற்றின் வேகத்தால் மலைப் பகுதியில் தீ வேகமாக பரவியது. இதையடுத்து மாவட்ட வனத்துறை அதிகாரி கந்தசாமி உத்தரவின் பேரில் தெற்கு வனச்சரக ரேஞ்சர் பாலசுப்பிரமணியன், பாரஸ்டர் கண்ணன் மற்றும் ஊழியர்கள் தீயை அணைத்தனர்.
தொடர்ந்து நேற்று மலைப் பாதையில் செல்லும் வாகனங்கள், பொதுமக்களுக்கு தீ தடுப்பு குறித்த விளக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது. தெற்கு சரக ரேஞ்சர் பாலசுப்பிர மணியன் தலைமையில் ஊழியர்கள் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.
இதுகுறித்து ரேஞ்சர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், தற்போது கோடை காலம் என்பதால் ஏற்காடு மலைப் பகுதியில் அதிக அளவில் தீ விபத்து நடக்கும். அதே போல் தான் நேற்றும் நடந்துள்ளது.
அதை தடுக்கும் வகையில் வன ஊழியர் ரோந்து தீவிரமாக்கப்பட்டுள்ளது. சேர்வராயன் மலையில் வசிக்கும் மலைக்கிராம மக்களுக்கு வன நிலம் வழியாக செல்வதற்கு சில வழிப்பாதைகள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நடைபாதையில் மட்டுமே பொதுமக்கள் செல்ல வேண்டும்.
நடைபாதையில் செல்பவர்கள் பீடி, சிகரெட், தீ பெட்டி, பிளாஸ்டிக் உட்பட எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. மீறுபவர்கள் மீது கிராம வனக்குழுக்கள் மற்றும் வனத் துறை மூலம் தக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
கோடை காலத்தில் காடுகளில் தீ வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.