குடிசை பகுதி மக்கள் தொகை தனியே கணக்கெடுப்பு!
சென்னை: 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளின் போது குடிசைப்பகுதிகளை தனியே கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
'2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள்' இரண்டு கட்டமாக நடக்கிறது. நகராட்சி பகுதிகள், ஊராட்சி, பேரூராட்சி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களாக ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களும், மேற்பார்வையாளர்களாக தலைமை ஆசிரியர்கள், வருவாய்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆறு கணக்கெடுப்பாளர்களுக்கு ஒருவர் வீதம் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற் கட்டமாக வீட்டு பட்டியல் கணக்கெடுக்கும் பணி வரும் ஜூன் முதல் தேதியில் இருந்து ஜூலை 15 வரை நடக்கிறது.
இதில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வீடுகளின் எண்ணிக்கை, குடியிருப்புகளின் விபரம் சேகரிக்கப் பட உள்ளது. இந்த பணியுடன் சேர்த்து தேசிய மக்கள் தொகை பதிவேடும் தயாரிக்கப்பட உள்ளது.
இதில் தனி நபர் அடையாள அட்டை வழங்குவதற்காக தனி நபரின் அனைத்து அங்க அடையாளங்கள் மற்றும் விபரங்களும் சேகரிக்கப் பட உள்ளன.
இந்த பணிகளையும் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களே மேற்கொள்ள உள்ளனர்.வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு பணியை தொடர்ந்து 2011 பிப்ரவரி 9 முதல் 25 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
ஒரு கணக்கெடுப்பாளருக்கு 150 வீடுகள் அல்லது, 600 நபர்கள் என்ற அளவில் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த பணிக்காக எட்டாயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்த முறை மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிசை பகுதிகளையும், அங்குள்ள மக்கள் விபரங்களையும் தனியாக கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் குடிசை பகுதிகளை அடையாளம் கண்டு மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.