நாடாளுமன்றத்தில் மகளிர் தினமான மார்ச் 8ல் மகளிர் மசோதா தாக்கல்
சர்வதேச மகளிர் தினத்தன்று இந்திய மகளிருக்கு பரிசு போல இதை செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இந்த சட்டம் மட்டும் நிறைவேறினால், நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும்.
இதற்கு முன்பு இந்த சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதை தாக்கல் செய்ய முடியாத நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது தாக்கல் செய்து விட முடியம் என்ற நம்பிக்கையுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உள்ளது.
இந்த சட்ட மசோதாவை ஆதரிப்போம் என பாஜக, இடதுசாரிகள் தெரிவித்துள்ளன. அதேசமயம், லாலு பிரசாத், முலாயம் சிங் யாதவ், மாயாவதி ஆகியோரின் கட்சிகள் தற்போதைய வடிவில் மசோதாவை கொண்டு வந்தால் கடுமையாக எதிர்ப்போம் என்று கூறியுள்ளன.
பிற்பட்ட மகளிருக்கு தனி ஒதுக்கீடு தேவை என்று அவை கூறி வருகின்றன. அதேசமயம், ரகசியமான முறையி்ல இவர்களின் ஆதரவை வளைக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இறங்கியுள்ளது.
லாலு பிரசாத் யாதவை, பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார். அதேபோல பிற கட்சிகளையும் வளைக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது கட்சியின் பெண் எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
லோக்சபாவில் இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றத் தேவையான ஆதரவு எண்ணிக்கை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிடம் உள்ளது. அதேசமயம், ராஜ்யசபாவில் அந்தப் பலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அவைகளிலும் கட்சிகளின் பலம்..
ராஜ்யசபா - 155 ஓட்டுக்கள் கிடைத்தால் மசோதாவை நிறைவேற்ற முடியும். தற்போது காங்கிரஸ் வசம் 71, இடதுசாரிகள் வசம் 22, பாஜகவிடம் 45 பேர் உள்ளனர். 26 பேர் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
லோக்சபா - இங்கு 363 பேரின் ஆதரவு தேவை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிடம் மட்டும் 410 பேர் உள்ளனர் என்பதால் இங்கு அவர்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் மசோதாவை தாக்கல் செய்வதுதான் இப்போது வரை பெரும் சிக்கலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொறடா உத்தரவு..
இதற்கிடையே, மசோதா தாக்கல் செய்யப்படும் தினத்தன்று அனைத்து உறுப்பினர்களும் அவையில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸும், பாஜகவும் தத்தமது உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவைப் பிறப்பித்துள்ளன.
மகளிர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் அவை உத்தரவிட்டுள்ளன.