நித்தியானந்தா ஆசிரமத்தில் நுழைந்த பாம்பு-தொடர்ந்து வந்த செக்ஸ் வம்பு!
நித்தியானந்தா - நடிகை ரஞ்சிதாவின் செக்ஸ் லீலைகள் குறித்த வீடியோ டேப் வெளியாவற்கு சில தினங்களுக்கு முன்பு பெங்களூர் அருகே பிடாதியில் உள்ள நித்தியானந்தாவதின் ஆசிரமத்திற்குள் ஒரு பாம்பு புகுந்து விட்டது. இதுகுறித்து வனத்துறை வார்டன் சரத்பாபு என்பவருக்குத் தகவல் போனது.
அங்கு சென்ற சரத் பாபு, ஆசிரம சூழல் சற்று வித்தியாசமானதாக இருப்பதை உணர்ந்துள்ளார். மேலும் பெருமளவில் சந்தனக் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் பார்த்துள்ளார்.
ஏதோ சட்டவிரோதமான காரியங்கள் நடைபெறுவதாக உணர்ந்த அவர் இதுகுறித்து அரசுக்கும் தகவல் கொடுத்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த அரசுத் தரப்பில் தயாராகி வந்தனர்.
இந்த நிலையில்தான் ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா செய்த லீலைகள் குறித்த வீடியோ வெளியானது.
இதையடுத்து இனியும் தாமதிக்கக் கூடாது என்று முடிவு செய்து வனத்துறை அதிகாரிகள் குழு ஆசிரமத்திற்குள் புகுந்து ரெய்டு நடத்தி அங்கிருந்து கிட்டத்தட்ட 60 கிலோ எடையுள்ள சந்தனக் கட்டைகளைக் கைப்பற்றியது.
அதேசமயம், வனத்துறையினர் வருவதற்கு முன்பே அங்கிருந்த இரண்டு குடில்களை நித்தியானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் தீவைத்துக் கொளுத்தி விட்டனர்.
அங்கு சட்டவிரோதமான பொருட்கள் வைக்கப்பட்டிருக்கலாம். அவை போலீஸார் மற்றும் அதிகாரிகள் கையில் சிக்கி விடக் கூடாது என்பதற்காக அவற்றை கொளுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நித்தியானந்தா புலித் தோல் உள்ளிட்ட விலங்குகளின் தோல்களையும் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
தலைமறைவாகி விட்ட நித்தியானந்தாவை கர்நாடக போலீஸாரும் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் மைசூரில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ஒரு தகவல் வந்ததாம். இதனால் அங்கு தனிப்படையினர் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம், அவர் காசிக்குத் தப்பி ஓடியிருக்கலாம் என்று இன்னொரு தகவல் கூறுகிறது.
இந்த நிலையில் நித்தியானந்தாவின் ஆசிரமம் அமைந்துள்ள பகுதி ஆடு, மாடுகள் மேய்வதற்கான மேய்ச்சல் நிலமாம். அங்கு ஆசிரமம் கட்டி வைத்திருப்பதால் இது சட்டவிரோத நடவடிக்கையாக கர்நாடக அரசு கருதுகிறது. இதுகுறித்து ராமநகர மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாம். அது வந்தவுடன் சட்டவிரோதமாக ஆசிரமம் அமைத்ததாக கூறி புதிய வழக்கு தொடரப்படும் எனத் தெரிகிறது.