பென்னாகரம்: திமுக, அதிமுக, பாமக, தேமுதிக வேட்பாளர்களின் சொத்து விவரம்
தருமபுரி: பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவர்களில் திமுக வேட்பாளர் தனக்கு ரூ. 27 லட்சம் அளவிலும், தனது தாயார் பெயரில் ரூ. 96 லட்சம் அளவுக்கும் சொத்து இருப்பதாக கணக்குக் காட்டியுள்ளார்.
வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்...
அன்பழகன்-அதிமுக: அசையா சொத்துக்களாக தாளப்பள்ளத்தில் சொந்த வீடு, நிலம். அசையும் சொத்துக்களாக ஸ்கார்பியோ கார், 2 லாரிகள், வங்கிக்
கணக்கில் ரூ.60 ஆயிரம் கையிருப்பு. மொத்த சொத்து மதிப்பு ரூ.60 லட்சம்.
இன்பசேகரன்- திமுக: 2 கார், செந்தாரப்பள்ளியில் 5 ஏக்கர் பரப்பளவில் கல்குவாரி, ஆந்திராவில் கல் குவாரியில் பங்கு, ஜெயலட்சுமி ஆசிரியர் கல்லூரியில் பங்கு, இயந்திர சாதனங்களாக ரூ.50 லட்சத்து 77 ஆயிரம், 1.5 ஏக்கரில் புதிய வீடு, 3 சென்ட் பரப்பளவில் பழைய வீடு.
மொத்த சொத்து மதிப்பு தனது பெயரில் ரூ.27 லட்சத்து 70,093, மனைவி பெயரில் ரூ.18.32 லட்சம், தாயார் பெயரில் ரூ.96.12 லட்சம்.
தமிழ்குமரன்- பாமக: அசையும் சொத்து மதிப்பு ரூ.75 லட்சத்து 43,884, அசையா சொத்துக்கள் மதிப்பு ரூ.11 லட்சத்து 16,250.
காவேரிவர்மன்- தேமுதிக: விவசாய நிலம் 3 ஏக்கர், பாப்பாரப்பட்டியில் 2 கடைகள், திருமல்வாடியில் ஓட்டு வீடு. மொத்த சொத்து மதிப்பு ரூ.16 லட்சம்.
அரசியல் தலைவர்களை வீடியோவில் படமாக்க உத்தரவு:
இதற்கிடையே, பென்னாகரத்தில் பிரசாரம் மேற்கொள்ள வரும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்களின் செயல்பாடுகளை வீடியோவில் படமாக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பென்னாகரம் தொகுதியில் மாநில அமைச்சர் எ.வ.வேலு, மக்களவை உறுப்பினர் சுகவனம், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலரும் முகாமிட்டு தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் மீது தொடர்ந்து சரமாரியாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
இதையடுத்து பென்னாகரம் தொகுதிக்குள் வரும் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்களின் செயல்பாடுகளை விடியோ மூலம் கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தருமபுரி மாவட்டத்துக்கு வரும் அமைச்சர்கள், முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்களின் நடவடிக்கைள் விடியோ படமாக எடுக்கப்படும்.
தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு அனுப்பப்படும் விடியோ "டேப்' அங்கு வைத்து பார்க்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டது தெரிய வந்தாலோ அல்லது வேறு ஏதாவது முறைகேடுகளில் ஈடுபட்டாலோ அது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.