நித்யானந்தா ஆசிரமத்தில் கனடா பெண் சீடர் கொலை: லெனின் கருப்பன் புகார்
நித்யானந்தாவுடன் ரஞ்சிதா நெருக்கமாக இருந்த வீடியோவை ரகசியமாக எடுத்த இவர் இன்று சென்னை காவல் ஆணையர் ராஜேந்திரன் முன் தஞ்சம் அடைந்தார்.
அப்போது நித்யானந்தா-ரஞ்சிதா முழு லீலைகள் அடங்கிய வீடியோ சிடியை கமிஷ்னரிடம் தந்தார்.
பின்னர் அவர் அளித்த புகாரில், ஆசிரமத்தில் பல பெண்களை நித்யானந்தா சீரழித்துள்ளதாகவும், ஒரு கனடா நாட்டுப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
அவரால் கட்டாய ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட சிலர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் நித்யானந்தாவிடம் சீடர்கள் ஏமாறுவதைத் தடுக்கவே இந்த வீடியோவை எடு்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
வழக்குகள் பெங்களூருக்கு மாற்றம்:
இந்த விவகாரம் குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில்,
லெனின் கொடுத்த புகாரின்பேரில் சாமியார் நித்யானந்தா மத உணர்வை துன்படுத்துதல், மோசடி, கற்பழிப்பு, இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளுதல், மிரட்டல், சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய 6 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகார் மனுவுடன் லெனின் நித்யானந்தரின் படுக்கை அறை காட்சிகள் அடங்கிய சி.டி. ஒன்றையும் கொடுத்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து சம்பவங்களும் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்றுள்ளதால் வழக்குகள் அனைத்தும் அந்த மாநில போலீசாருக்கு மாற்றப்படும்.
இதற்கான ஏற்பாடுகள் தமிழக டிஜிபி மூலம் நடந்து வருகிறது. இந்த வழக்குகள் தொடர்பாக கர்நாடக போலீசாருக்கு தேவைப்படும் எல்லா உதவிகளையும் தமிழக போலீசார் செய்வார்கள் என்றார்.
பர்மா பஜாரில் ரஞ்சிதா-நித்யானந்தா சி.டிக்கள் அதிகமாக விற்கப்படுவதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, 'அப்படியா' என்றார் கமிஷ்னர்.
லெனின் தந்துள்ள சாமியாரின் சி.டி. எவ்வளவு நேரம் ஓடுகிறது என்று கேட்டதற்கு, நான் சி.டி.யை பார்க்கவில்லை என்றார். அப்போது அருகில் இருந்த துணைக் கமிஷனர் ஸ்ரீதர் கூறுகையில், இந்த சிடி இரண்டரை மணி நேரம் ஓடுகிறது என்றார்.
சாமியாருடன் படுக்கை அறையில் இருப்பது நடிகை ரஞ்சிதா தானா என்று கேட்டதற்கு, ஆம் அவர் ரஞ்சிதா தான், அவர் எங்கே இருக்கிறார் என்று விசாரித்து வருகிறோம் என்றார் கமிஷ்னர்.