2050ம் ஆண்டில் நாட்டை பிடிக்க நக்ஸல்கள் திட்டம்-உள்துறை
டெல்லி: 2050ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் பெரும் புரட்சியை நடத்தி, ஆட்சியைப் பிடிப்பதே மாவோயிஸ்டுகளின் திட்டமாகும். இதற்காக மாஜி ராணுவத்தினரின் உதவியையும் அவர்கள் நாடியுள்ளனர் என்று மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த பாதுகாப்பு ஆய்வு கழக கூட்டத்தில் அவர் பேசுகையில், நக்சலைட்டுகளின் நடவடிக்கைகளை விரிவாக ஆராய்ந்து பார்த்தால், அவர்களுக்கு முன்னாள் ராணுவத்தினரின் உதவிகள் தாராளமாக கிடைப்பது உறுதியாகிறது.
மேலும், 2050ம் ஆண்டில் இந்தியாவை தங்களது பிடிக்குக் கொண்டு வருவதும் அவர்களின் நோக்கமாக இருப்பது புலனாகிறது. புரட்சியின் மூலம் இதை சாதிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பேச்சுவார்தைதகளில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை, அக்கறையும் இல்லை. அவர்கள் மீதான நெருக்கடி வலிமையாக இல்லாததே இதற்குக் காரணம். அவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ. 1400 கோடி அளவுக்கு வருமானம் வருகிறது.
சுயமாக ராணுவப் படை ஒன்றை நிறுவும் நோக்கில் அவர்கள் தங்களது நிலையை வலுப்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஒன்று சேர ஆரம்பித்துள்ளனர். தங்களது திட்டங்களை நனவாக்கும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர்.
வளர்ச்சித் திட்டங்கள் போதிய அளவில் இல்லாதது, நிர்வாக ரீதியில் காணப்படும் ஓட்டைகளை சாதகமா பயன்படுத்தி வேலையில்லாத இளைஞர்களை இழுத்து வருகின்றனர்.
விரைவில் பீகாரில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. எனவே அங்கு அவர்கள் புகுந்து நாச வேலைகளை ஏற்படுத்த முயலலாம். பீகார் மாநில அரசு மாவோயிஸ்டுகள் விஷயத்தில் மிகக் கடுமையாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
நக்சலைட்டுகளிடம் அதி நவீன வெடிகுண்டுகள் உள்ளிட்டவை உள்ளன. மிகத் துல்லியமாக உளவு பார்த்து போலீஸ் நிலைகளையும், முகாம்களையும் அவர்கள் தாக்குகின்றனர்.
தாக்குதல் நடத்தி விட்டு மின்னல் வேகத்தில் அவர்களால் தப்பிப் போக முடிகிறது. மேலும் பாதுகாப்புப் படையினரிடமிருந்து பெருமளவிலான ஆயுதங்களையும் அவர்களால் துணிகரமாக பறித்துச் செல்ல முடிகிறது என்றார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட எழுத்தாளர் அருந்ததி ராய், பிள்ளையின் கருத்துக்களை மறுத்துப் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது. இருவருக்கும் இடையே கடும் வாதம் மூளும் நிலையும் உருவானது.
அருந்ததி ராய் கூறுகையில், இந்திய அரசை புரட்சியின் மூலம் தூக்கி எறியப் போகிறார்கள், ராணுவத்தை அமைக்க ஆரம்பித்துள்ளனர் என்று பிள்ளை கூறுவது தவறு. அப்படி அவர் சொல்வதை மாவோயிஸ்டுகள் தங்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாக எடுத்துக் கொள்ளும் அபாயம் உள்ளது.
நக்சலைட்டுகள் இன்று ஒரு ராணுவத்தைப் போல இல்லை. கொரில்லாத் தாக்குதல்களைத்தான் அவர்கள் நடத்தி வருகின்றனர். நான் நக்சல் வன்முறையை ஒரு போதும் ஆதரித்ததில்லை என்றார் அருந்ததி ராய்.