ஆப்கன் அதிபருடன் மேனன் சந்திப்பு: நிருபமா இன்று இலங்கை பயணம்
காபூலில் இந்தியர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் பலியானதையடுத்து அந் நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள், மருத்துவமனைகளில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்பை ஆய்வு செய்ய சிவசங்கர மேனன் ஆப்கானி்ஸ்தான் சென்றுள்ளார்.
அந் நாட்டு ராணுவ, காவல்துறை, உளவுப் பிரிவு அதிகாரிகளுடன் பேச்சு நடத்திய அவர் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினார்.
மேலும் ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயையும் சந்தித்துப் பேசினார். அப்போது இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தொடர்பு குறித்தும் இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.
ஆப்கானிஸ்தானி்ல் சாலை அமைப்பது, நாடாளுமன்றம் கட்டுவது உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளி்லும் சுமார் 4,000 இந்தியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல ராணுவ மருத்துவர்களும் அங்கு சேவையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவக் குழு இந்தியா திருமபியது:
இந் நிலையில் இந்திய மருத்துவக் குழுவைச் சேர்ந்த ஒரு பிரிவு பாதுகாப்பு காரணங்களுக்காக நாடு திரும்பிவிட்டது.
ஒசாமா இருக்குமிடம்-ஐ.எஸ்.ஐ.க்கு தெரியும்?:
இந் நிலையில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் அல்-கொய்தா தலைவர் பின்லேடன் மறைந்துள்ள இடம் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐக்கு தெரியும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் ஸ்டீபன் டேனர் கூறியுள்ளார்.
பின்லேடன் மறைவிடம் தெரிந்தும், அதை ஐ.எஸ்.ஐ. ரகசியமாக வைத்துள்ளது. இந்தியாவுடனான அமெரிக்காவின் நெருக்கத்தை பாகிஸ்தான் விரும்பவில்லை. அதனால்தான், அமெரிக்கா மீது செல்வாக்கை அதிகரிக்க பாகிஸ்தான் இப்படி நடந்து கொள்கிறது என்று கூறியுள்ளார்.
இன்று இலங்கை செல்லும் நிருபமா ராவ்:
இந் நிலையில் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ், இரண்டு நாள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார்.
வெளியுறவுச் செயலாளர் ஆன பின் அவர் இலங்கைக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். அவர் ஏற்கனவே அந் நாட்டில் இந்தியத் தூதராக இருந்துள்ளார்.
புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின் நிருபமா அங்கு செல்வது இதுவே முதல் முறை.
தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை முன்வைக்குமாறு இலங்கையை இந்தியா நெருக்கி வரும் நிலையில் நிருபமாவின் இந்தப் பயணம் மிகுந்த முக்கிய்ததுவம் பெறுகிறது.