அரசு அதிக கடன் வாங்கியதால் வட்டிச் சுமை அதிகரிப்பு-பாஜக
டெல்லி: காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு அதிக அளவில் கடன் வாங்கியுள்ளதால் வட்டிச் சுமை அதிகரித்துள்ளதாக பாஜக கூறியுள்ளது.
அக் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் அருண் ஜேட்லி நிருபர்களிடம் கூறுகையில்,
நாடு எத்தனையோ பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளது. ஆனால் இவற்றுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய அரசு தெளிவாக எந்த பதிலையும் அளிக்கவில்லை.
குறிப்பாக விலைவாசி உயர்வு, அதிகரித்து வரும் மாவோயிஸ்டு அச்சுறுத்தல், வெளிநாட்டு கொள்கை, பாகிஸ்தானுடனான உறவு ஆகிய முக்கியப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எத்தகைய நடவடிக்கையை அரசு எடுக்க உள்ளது என்பது குறித்து பிரதமர் ஏதும் கூறாதது ஏமாற்றத்தையே தருகிறது.
அமைதிப் பேச்சில் கலந்து கொள்ள வேண்டுமானால் தங்கள் மீதான தாக்குதலை முதலில் நிறுத்த வைக்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர். ஆனால் அவர்கள் இவ்வாறு கோரிய பின்னர்தான் கொடூரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் தாங்கள் இப்படித்தான் நடந்து கொள்வோம், எங்களது செயலை மாற்றிக் கொள்ளமாட்டோம் என்பதை மாவோயிஸ்டுகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனாலும் மாவோயிஸ்டுகள விவகாரத்தில் மத்திய அரசிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை என்றார் அருண் ஜேட்லி.
பணவீக்கத்துக்கு வழிவகுக்கும் பட்ஜெட்:
இந் நிலையில் பாஜக தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா கூறுகையில்,
மத்திய பட்ஜெட் பணவீக்கத்துக்கு வழிவகுக்கும். இந்த பட்ஜெட்டில் மிக அதிகமான நிதிச் சுமைகள் உள்ளன. இது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வளர்ச்சி நிச்சயம் பாதிக்கப்படும்.
பெட்ரோல், டீசல் மீது உற்பத்தி வரி விதிக்கப்பட்டதால் அது உணவுப் பணவீக்கத்தை அதிகரித்து, உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு விநியோகத்தில் உள்ள குறைகளே காரணம் என அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது. உணவுப் பொருள் நிர்வாகத்தில் அரசு உரிய கவனம் செலுத்தாததே விலை உயர்வுக்கு முக்கியக் காரணம்.
கோதுமை விளைச்சல் குறைவாக இருக்கும்போது அது ஆன்லைன் முன்பேர வணிகத்துக்கு அனுமதிக்கப்பட்டதால், பற்றாக்குறை ஏற்பட்டது. அதேபோல உள்நாட்டுத் தேவைக்கே சர்க்கரை போதுமானதாக இல்லாத நிலையில் ஏற்றுமதிக்கு அனுமதித்தனர். இதனால் தான் அதன் விலை உயர்ந்தது.
நிதிப் பற்றாக்குறையை 5.5 சதவீதமாகக் குறைக்க நிதியமைச்சர் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டுள்ளார். ஆனால், பிரச்சனை நிதிப் பற்றாக்குறை அல்ல. வருவாய் பற்றாக்குறைதான் பெரிய பிரச்சனை. ஆனால் அது குறித்து பட்ஜெட்டில் எதுவுமே இல்லை.
அரசு நிறுவனப் பங்கு வெளியீடு மூலம் திரட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள ரூ. 40,000 கோடியும் எட்ட முடியாத இலக்குதான்.
காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு அதிக அளவில் கடன் வாங்கியுள்ளதால் வட்டிச் சுமையும் அதிகரித்துள்ளது என்றார் சின்ஹா.