பென்னாகரத்திலிருந்து திரும்பிய தங்கபாலு கார் மீது கல்வீச்சு
தர்மபுரி: பென்னாகரத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசி விட்டுத் திரும்பும்போது தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கார் மீது கல்வீசித் தாக்கப்பட்டது.
பென்னாகரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்தல் பிரசார பொது கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கலந்து கொண்டு பேசி விட்டு தர்மபுரிக்கு காரில் புறப்பட்டார்.
தர்மபுரி அருகே சோகத்தூர் என்ற பகுதியில், இரவு 10.10 மணிக்கு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த 2 பேர் தங்கபாலுவின் கார் கண்ணாடி மற்றும் அவரை பின் தொடர்ந்து வந்த 2 கார்களின் மீது கற்களை வீசினார்கள்.
இதில் 3 கார்களின் கண்ணாடியும் உடைந்து சேதம் அடைந்தது. இதில் தங்கபாலு வந்த காரின் பின்னால் வந்த காரை ஓட்டிய டிரைவர் காயம் அடைந்தார்.
பின்னர் அந்த இரு நபர்களும் இருளில் ஓடி விட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தங்கபாலு தர்மபுரி அதியமான் ஓட்டலில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், இது சம்பந்தமாக போலீசில் புகார் செய்யப்படும் என்றார். இதைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட எஸ்.பி. சுதாகரை சந்தித்துப் புகார் கொடுத்தார்.