பென்னாகரம் இடைத் தேர்தலை நடத்தப் போகும் 3 பெண் அதிகாரிகள்
தர்மபுரி: பென்னாகரம் இடைத் தேர்தலை நடத்தும் பொறுப்பு மூன்று பெண் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 3ம் தேதி தொடங்கியது.
இடைத் தேர்தலை மூன்று பெண் அதிகாரிகள் நடத்தவிருக்கின்றனர். தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அமுதா, பென்னாகரம் தொகுதி தேர்தல் அதிகாரியும், ஆர்டிஓவுமான மகேஷ்வரி ரவிக்குமார், டி.எஸ்.பி. பஞ்சவர்ண் ஆகியோரே அவர்கள்.
3 அதிகாரிகளும் இணைந்து அனைத்துத் துறையினரின் ஒத்துழைப்புடன் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடியத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 பார்வையாளர்கள் நியமனம்...
இதற்கிடையே, இடைத்தேர்தல் பணிகளை கண்காணிக்க 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
அவர்களில் ஒருவர் சஞ்சய்போஸ் ரெட்டி. இவர் லக்னோவில் உத்தரபிரதேச அரசின் வருவாய் வாரிய நீதியியல் உறுப்பினராக உள்ளார்.
மற்றொரு தேர்தல் பார்வையாளராக டி.பி.அகூஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போபாலில் மத்திய பிரதேச அரசின் வறட்சிக்கு இலக்காகும் பகுதி திட்டத்தில், திட்ட இயக்குனராக உள்ளார்.
இரு அதிகாரிகளும் 30ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடியும் வரை பணியில் இருப்பார்கள்.