நெல்லை: இளைஞர் காங். தேர்தலில் மும்முனைப் போட்டியால் பரபரப்பு
நெல்லை: நெல்லையில் இளைஞர் காங் தேர்தல் நேற்று ஆரம்பமானது. மும்முனை போட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை நாடாளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரசில் 66 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதனையடுத்து நிர்வாகிகள் தேர்தல் 6 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று ஆரம்பமானது. இத்தேர்தல் நாளை 8ம் தேதியுடன் முடிவடைகிறது.
பாளை தொகுதிக்கான தேர்தல் கொக்கிரகுளம் மாநகர் மாவட்ட காங் அலுவலகத்தில் நடந்தது. இதில் நெல்லை மாநகராட்சி 5 முதல் 20 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது.
ஒவ்வொரு வார்டுக்கும் தலைவர், துணை தலைவர், 8 பொது செயலாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் 35 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். இதற்கு வசதியாக வாக்களார்களுக்கு ஓட்டு சீட்டுகளும் வழங்கப்பட்டன.
தேர்தலை போன்று ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டு விரல்களில் மை தடவி ஓட்டுபதிவு நடந்தது. இத்தேர்தலை புதுச்சேரியைச் சேர்ந்த காளிமுத்து நடத்தினார்..
நெல்லை சட்டசபை தொகுதிக்கான தேர்தல் நெல்லை ஜங்ஷன் ஆர்கேவி மண்டபத்தில் நடந்தது. இங்கு நெல்லை மாநகராட்சி 1 முதல் 4 மற்றும் 40 முதல் 45 வார்டுகளுக்கும், மானூர் பஞ்சாயத்து யூனியனில் சில வார்டுகள், நாராணம்மாள்புரம், சங்கர் நகர் டவுன் பஞ் பகுதி வார்டுகளுக்கும் தேர்தல் நடந்தது. கோழிக்கோடு கபூர் தேர்தலை நடத்தினார்.
தேர்தலை ஓட்டி அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தீவிர பிரசாரம் செய்து ஓட்டு வேட்டையாடினர்.