உலகக் கோப்பை ஹாக்கி - அரை இறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா
டெல்லி: உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் அரை இறுதி வாய்ப்பை முழுமையாக இழந்து விட்டது இந்தியா.
நேற்று நடந்த முக்கியப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவி அரை இறுதிக்கு போட்டியிடுவதற்கு இருந்த கொஞ்ச நஞ்ச வாய்ப்பையும் தவற விட்டு விட்டது இந்தியா.
மேலும் இந்தத் தோல்வி இந்தியாவுக்கு இந்தத் தொடரில் கிடைத்த 3வது தொடர் தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தியது இந்தியா. இதனால் நம்பிக்கை பிறந்தது. ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் அடுத்து நடந்த மூன்று போட்டிகளிலும் இந்தியா பரிதாபமாக தோல்வியைத் தழுவியது.
நேற்றைய வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரை இறுதிக்குள் நுழைந்தது. அரை இறுதிக்குள் நுழைந்த முதல் அணி இதுதான்.
நாளை இந்தியா தனது கடைசிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது.
பாகிஸ்தானை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா...
முன்னதாக நேற்று நடந்த இன்னொரு ஆட்டத்தில் வலுவான பாகிஸ்தான் அணியை எதிர்பாராத வகையில் தென் ஆப்பிரிக்கா 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
இந்தத் தொடரில் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வந்த அணி தென் ஆப்பிரிக்கா. இந்த நிலையி்ல் நேற்று அது தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.