மெல்போர்னில் இந்திய குழந்தை மர்மக் கொலை - ஒருவர் கைது
மெல்போர்னில் வசித்து வரும் இந்திய தம்பதியின் மூன்று வயது குழந்தை குர்ஷான் சிங் சென்னா. கடந்த வியாழக் கிழமை திடீரென காணாமல் போன குழந்தை, ஆறு மணி நேரத்துக்கு பின்னர், வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தொலைவில், புறநகர் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
குழந்தை கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். குழந்தையின் பெற்றோர் தங்கியிருந்த வாடகை குடியிருப்பில் மொத்தம் 12 பேர் இருந்தனர்.
கொல்லப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு தெரிந்தவர்கள்தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என சந்தேகித்த போலீசார், இச்சம்பவத்துக்கான பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக ஒரு நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். எனினும் கைது செய்யப்பட்டவர் பற்றிய தகவல்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர்.