பென்னாகரத்தில் ராமதாஸ் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - பாமக குற்றச்சாட்டு
பென்னாகரம்: இடைத்தேர்தல் நடைபெற உள்ள பென்னாகரத்தில் பிரச்சாரத்துக்காக வந்திருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம் சட்டசபைத் தொகுதி பாமக தலைமை தேர்தல் பணிக்குழு தலைவர் வேல்முருகன் இதுபற்றி கூறியிருப்பதாவது:
டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் பென்னாகரம் தொகுதியில் இரவு 9.30 மணிக்கு தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு காரில் தர்மபுரி நோக்கி தொண்டர்களோடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது ராமதாஸின் கார் ஆட்டுக்காரன்பட்டி அருகே வந்தபோது, இருளில் மறைந்திருந்த ஒரு கும்பல், ராமதாஸின் காரை நோக்கி பெட்ரோல் குண்டை வீசியது.
ராமதாஸின் கார் டிரைவர் முனி, சாமர்த்தியமாக வலது புறமாக காரை திருப்பினார். இதனால் பெட்ரோல் குண்டு, காரில் விழாமல் வேறு இடத்தில் சென்று விழுந்தது. இந்த சம்பவத்தில் டாக்டர் ராமதாஸ் மயிரிழையில் உயிர் தப்பினார்.
அதன் பின்பு அந்த கும்பல் இரும்பு ராடை தூக்கி வீசியது. அது டாக்டர் ராமதாசின் தனி பாதுகாவலர்கள் வந்த பைலட் வண்டியின் மேலே உள்ள விளக்கின் மீது விழுந்தது. அதில் ஒரு விளக்கு உடைந்தது.
இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும். இல்லையெனில் பாமக போராட்டத்தில் ஈடுபடும்' எனக் கூறியுள்ளார்.