கூடன்குளம் அணுமின் நிலையம்- ரூ.66 லட்சம் மின் கம்பிகள் திருட்டு
நெல்லை: கூடன்குளம் அணுமின் நிலையத்துக்கு சொந்தமான ரூ.66 லட்சம் மதிப்பிலான அலுமினிய மின் கம்பிகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர்.
கூடன்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகத்துக்காக ராட்சத டவர்கள் அமைக்கப்பட்டு உயர் மின்அழுத்த கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கம்பிகளில் தற்போது மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் காட்டுப்பகுதி வழியாக செல்லும் இந்த அலுமினிய மின் கம்பிகளை மர்ம நபர்கள் சுலபமாக வெட்டி எடுத்து சென்று விடுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஆலங்குளம் அருகே உள்ள உகந்தன்பட்டியில் இருந்து 3 கி.மீ தொலைவில் 5 முனை மின்கம்பிகளை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்று விட்டனர்.
1,680 மீட்டர் நீளமுள்ள இந்த மின்கம்பிகளின் மதிப்பு ரூ.7.5 லட்சம். இதே போல் பத்தமடை அருகே உப்பூரணியில் இருந்து 3.5 கி.மீ தொலைவில் ரூ.8.42 லட்சம் மதிப்புள்ள 3,049 மீட்டர் மின் கம்பிகளையும், சுத்தமல்லி பகுதியில் இருந்து மீனவன்குளம் வரை 19 டன் எடையுள்ள ரூ.50 லட்சம் மதிப்புள்ள மின்வயர்களையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து அபிஷேகப்பட்டி பொறுப்பாளர்கள் பாண்டியராஜா, சிவதாஸ் ஆகியோர் ஆலங்குளம், சுத்தமல்லி, பத்தமடை காவல் நிலையங்களில் புகார் செய்துள்ளனர்.