இலங்கையில் மனித உரிமைக்குழு- ஐ.நா யோசனையை நிராகரித்தார் ராஜபக்சே
இலங்கையில் விடுதலைப் புலிகள் உடனான போரின் போது மனித உரிமைகள் பெருமளவு மீறப்பட்டதாக புகார்கள் எழுந்தன. ராணுவத்தினர் நிகழ்த்திய படுகொலைகள் ஆதாரப் பூர்வமாக வீடியோ மூலமாக வெளியாகின. ஆனால் அனைத்துப் புகார்களையும் ஒரேயடியாக மறுத்து விட்டது இலங்கை அரசு.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை படையினரின் போர்க்குற்றம் தொடர்பாக நிச்சயம் விசாரணை நடத்தப்பட்டாக வேண்டும் என்று ஐ.நா. சபைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க சுதந்திரமான ஆய்வு குழு ஒன்றை அமைக்கும் திட்டத்தை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் முன் வைத்தார்.
ஆனால் பான் யோசனையை மகி்ந்தா ராஜபக்சே நிராகரித்து விட்டார். இதுகுறித்து தன்னுடன் தொலைபேசியில் பேசிய பான் கி மூனிடம் பேசிய ராஜபக்சே,
'இதுபோன்ற குழுவை அமைப்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது போன்றதாகும்.
இலங்கையைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்து விட்டது. விடுதலை புலிகளை முற்றிலும் ஒழித்துக் கட்டியாகி விட்டது.
உலகின் மிக மோசமான ஒரு தீவிரவாத இயக்கத்தை ஆயுத பலத்துடன் இலங்கை ராணுவம் அடக்கி ஒடுக்கிவிட்டது. தற்போது அது முடிந்துபோன விவகாரம்.
விடுதலைப் புலிகளின் அனுதாபிகளும், இலங்கை அரசுக்கு எதிராக செயல்படும் சில அமைப்புகளும் மட்டுமே மனித உரிமை மீறல்கள் குறித்து பேசி வருகிறார்கள்.
எனினும் இந்த குற்றச்சாட்டுகள் பற்றியும், அமெரிக்க வெளியுறவுத் துறை கூறிய புகார்களின் அடிப்படையிலும் விசாரணை நடத்த ஏற்கனவே சிறப்பு கமிட்டி ஒன்றை உருவாக்கியுள்ளோம்.
இலங்கையை விட மோசமான சூழல்கள் நிலவும் மற்ற நாடுகளில் இதுபோன்ற குழுக்கள் அமைக்காத நிலையில், இலங்கையில் மட்டும் பிரத்தியேகமாக விசாரணை குழு அமைப்பது பொருத்தமற்றதாகவே கருத முடிகிறது' என்று கூறி விட்டார்.
மேலும் இவ்விவகாரம் குறித்து ஐ.நாவுக்கு விளக்கமாக கடிதம் எழுத உள்ளதாகவும் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சின் மூலம் ஐ.நாவுடன் பகிரங்கமான மோதலுக்கும் தான் தயார் என்பதை ராஜபக்சே எடுத்துக் காட்டியிருப்பதாக தெரிகிறது.