நித்தியானந்தா மீதான ஒரு வழக்கை மட்டும் தமிழக போலீஸே விசாரிக்கும்
சென்னை சாமியார் நித்தியானந்தா மீது தொடரப்பட்டுள்ள ஆறு வழக்குகளில் ஒன்றை மட்டும் தமிழக போலீஸே விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஐந்தும் கர்நாடகத்திற்கு மாற்றப்படுகிறது.
நடிகை ரஞ்சிதாவுடன் குஜாலாக இருந்து சிக்கிய சாமியார் நித்தியானந்தா மீது தமிழக போலீஸார் கற்பழிப்பு உள்ளிட்ட ஆறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.
குற்றங்கள் நடந்த இடம் கர்நாடக மாநிலத்திற்குள் இருப்பதால், வழக்குகளை மொத்தமாக கர்நாடகத்திற்கு மாற்றுவதாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியிருந்தார்.
தற்போது இதில் சிறிய மாற்றம். ஒரு வழக்கை மட்டும் தமிழக போலீஸே விசாரிக்கவுள்ளதாம். நித்தியானந்தா, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது சீடரும், சாமியாரின் லீலைகளைப் படம் பிடித்தவருமான லெனின் என்கிற நித்ய தர்மானந்தா போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து கொலை மிரட்டல் வழக்கைப் போலீஸார் பதிவு செய்து அதை மட்டும் இங்கேயே விசாரிக்கவுள்ளனர்.
இதுதவிர மீதமுள்ள பாலியல் முறைகேடு, கூட்டுசதி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 5 வழக்குகள் கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்படும்.
நித்தியானந்தா ஆசிரமத்தில் வேலை பார்த்தவர்தான் இந்த நித்ய தர்மானந்தா என்ற லெனின். இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூர்.