நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து சென்னை இளைஞர் மீட்பு
அந்த நபரின் பெயர் மெய்யிறை. சென்னை அருகே மணலியைச் சேர்ந்த வாசன் என்பவரின் மகன். சென்னையில் நித்தியானந்தா கலந்து கொண்ட தியான சங்க முகாமுக்கு சென்ற மெய்யிறை அங்கு தியானம் கற்றார். பின்னர் பெங்களூரில் போய் கற்பதாக கூறி நித்தியானந்தாவுடன் பெங்களூர் ஆசிரமத்திற்குப் போய் விட்டார்.
இந்த நிலையில் ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா இருப்பது போன்ற வீடியோ வெளியானதைத் தொடர்ந்து மெய்யிறையை அவரது பெற்றோர் தொடர்பு கொண்டனர். அப்போது தான் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறினாராம் மெய்யிறை.
இதையடுத்து சென்னை காவல்துறையை அணுகினர் மெய்யிறையின் குடும்பத்தினர். அதைத் தொடர்ந்து சென்னை போலீஸார், கர்நாடக போலீஸாரை உஷார்படுத்தினர்.
மேலும் வாசன் தனது வக்கீலுடன் பெங்களூர் விரைந்தார். கர்நாடக போலீஸாரின் உதவியுடன் தற்போது மெய்யிறை மீட்கப்பட்டுள்ளார்.
அவரிடம் கர்நாடக போலீஸார் நித்தியானந்தா குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் தன்னைப் போல மேலும் பலர் ஆசிரமத்திற்குள் இருப்பதாக கூறியுள்ளாராம் மெய்யிறை.