தூத்துக்குடியில் சிலை திருட்டு - புகார் கொடுத்தவர் கைது
தூத்துக்குடி: ஐம்பொன் சாமி சிலைகள் திருட்டு விவகாரத்தில் திடீர் திருப்பமாக புகார் கூறிய தலைமை ஆசிரியரே கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஆசீர்ராஜாசிங். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர் புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
ஆறுமுகநேரியை சேர்ந்த குமார், பார்த்தசாரதி ஆகிய இருவரும் ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள நடராஜர் மற்றும் ஒன்றரை அடி உயரமுள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலை ஆகிய 2 ஐம்பொன் சாமி சிலைகளை திருடி சென்று விட்டதாக புகார் கூறினார்.
இதையடுத்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி குமார் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 ஐம்பொன் சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் நெல்லை சரக டிஐஜி சண்முகராஜேஸ்வரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆசீர் ராஜாசிங்கிடம் நேரடி விசாரணை நடத்தினார். அப்போது அவருக்கு சிலைகள் எப்படி கிடைத்தது என விசாரித்தார்.
அதற்கு அவர் முதலில் தனது சகோதரர் கொடுத்தாகவும், பின்னர் புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சொந்தமான சிலைகளை தான் கோர்ட் உத்தரவுபடி பாதுகாத்து வருவதாகவும், தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தன்னிடம் அந்த சிலைகள் வந்ததற்கான ஆதாரங்களையும் போலீசிடம் ஒப்படைக்கவில்லை. அவரது முரண்பட்ட பதில்களால் டிஐஜிக்கு அவர் மீது சந்தேகம் வந்தது. உடனே அவரை கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். ஆசிர் ராஜாசிங் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.