25 வருடங்களாக குடியிருந்த நரிக்குறவர்கள் விரட்டியடிப்பு
வள்ளியூர்: வள்ளியூரில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக குடியிருந்து வந்த 33 நரிக்குறவர் குடும்பத்தினர் நேற்று இரவு பஸ் நிலைய பகுதியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
வள்ளியூர் மாட்டுசந்தை பின்புறம், பஸ் நிலையம் அருகேயுள்ள காலி இடங்களில் 33 நரிக்குறவர் குடும்பத்தினர் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக கூடாரம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கலெக்டர் ஜெயராமன், நரிக்குறவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க ராதாபுரம் தாசில்தாருக்கு உத்தரவிட்டார். அதன்படி அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் பஸ் நிலையத்தில் காலியாக கிடந்த அந்த இடத்தில் இரு சக்கர வாகன கட்டண பாதுகாப்பகம் அமைக்கப்பட்டது. தனியார் ஒருவர் ஏலத்திற்கு எடுத்து அந்த இடத்தில் வாகன காப்பகம் நடத்தி வருகின்றனர்.
அவை ஓலைக்கீற்றுகளால் அமைக்கப்பட்டுள்ளதால் அதன் அருகே தங்கியுள்ள நரிக்குறவ குடும்பத்தினர் சமையல் செய்யும்போது தீப்பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நிர்வாக அதிகாரி வள்ளியூர் போலீசில் புகார் செய்தார்.
இதன் அடிப்படையில் வள்ளியூர் போலீசார் நேற்று இரவு நரிக்குறவர்களை விரட்டியடித்தனர். நரிக்குறவர்கள் தற்போது மாட்டு சந்தை நடைபெறும் இடத்தில் சென்று தங்கியுள்ளனர்.