தமிழர் மறுகுடியேற்றம்-விரைவுபடுத்த இலங்கைக்கு இந்தியா வலியுறுத்தல்
இலங்கைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்ட வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ், இன்று டெல்லி திரும்பினார்.
கடந்த இரண்டு நாட்களாக இலங்கையில் அதிபர் ராஜபக்சே உட்பட பல்வேறு தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை நிரூபமா ராவ் சந்தித்து பேசினார்.
இலங்கை பயணம் குறித்து டெல்லியில் நிருபர்களிடம் நிரூபமா ராவ் கூறுகையில்,
'இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறு சீரமைப்பு திட்டப் பணிகளில் இந்தியா தனது ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கி வரும் என்பதை இலங்கைக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.
கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களில் மக்களுக்கான மறு குடியமர்வு திட்டங்கள் துரிதமாக நடைபெற வேண்டியதை இலங்கையிடம் இந்தியா வலியுறுத்திக் கூறியுள்ளது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு பகுதிகளில் வீட்டு வசதி திட்டங்களில் இந்தியா தனது ஒத்துழைப்பை வழங்க இந்த துரித நடவடிக்கைகள் உதவிகரமாக அமையும் என்பதை இலங்கையிடம் தெரிவித்துள்ளோம்.
இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளை இணைக்க வேண்டியதன் அவசியம் குறித்து மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
இப்பகுதிகளில் உள்ள கல்வி, சமூக, கலாச்சார நிறுவனங்களுக்கு இந்தியா சார்பில் 55 பேருந்துகளை வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் இலங்கையில் வடக்குப் பகுதியில் ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள இந்தியா நிதி உதவி அளிக்க தயாராக இருக்கிறது' என்றார்.
மேலும் இந்திய - இலங்கை மீனவர்களுக்கு கடல் பகுதியில் பாதுகாப்பு வீரர்களால் ஏற்படும் இடைஞ்சல்கள் குறித்து விவாதிக்க கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை கூட்டவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ராஜபக்சேவுடன் நிரூபமா ஆலோசனை
முன்னதாக நேற்று இரவு ராஜபக்சேவை சந்தித்தார் நிரூபமா. முதலில் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் இலங்கையில் இந்திய அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையில்,
வட இலங்கைப் பகுதியில் சீர்கெட்டுள்ள ரயில் தண்டவாளப் பாதைகளை சீரமைத்துத் தருவதற்கு இந்தியா உதவும் என்று நிருபமா ராவ் தெரிவித்தார்.
புலிகளுடனான போரின்போது இலங்கையிலிருந்த 3 லட்சம் தமிழர்கள் அவர்களது இருப்பிடங்களை விட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
போர் முடிந்துள்ள நிலையில் அவர்களை மீண்டும் குடியமர்த்தும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.
தமிழர்களை மீண்டும் அவர்களது இடங்களில் குடியமர்த்தவும், அவர்களின் மறுவாழ்வுத் திட்டங்களுக்காகவும் ரூ.500 கோடியை இந்தியா கொடுத்துள்ளது.
தமிழர்களை குடியமர்த்தும் பணிக்காக இந்தியா, இலங்கைக்கு தொடர்ந்து உதவும். திரிகோணமலையில் அமைக்கப்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையத்தை கட்டி முடிக்க இந்தியா உதவும். அதுபோலவே இலங்கையில் ஆங்கில மொழி பயிற்றுவிக்கும் திட்டத்துக்கும் இந்தியா உதவி செய்யும் என்று நிரூபமா தெரிவித்தார்.
மேலும், தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மொழிவாரி சிறுபான்மையினர், குறிப்பாக தமிழர்களை திருப்திபடுத்துவதற்கான அரசியல் தீர்வை இலங்கை கொண்டு வரவேண்டும் என்றும் ராஜபக்சேவை நிரூபமா வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.