தனியார் மில்லில் தீ- ரூ.5 கோடி பொருட்கள் எரிந்து நாசம்
மேட்டுப்பாளையம்: தனியார் ஸ்பின்னிங் மில்லில் தீவிபத்து ஏற்பட்டு, ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் சாம்பலாயின.
மேட்டுப்பாளையத்தில் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில் உள்ளது.
இங்கு டர்கிடவல் தயாரிக்க தேவையான மூலப் பொருளான பஞ்சுகளை ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். மில்லையொட்டி குடோன் உள்ளது. அதில் நூல், பஞ்சு பேல்களை அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இன்று அதிகாலை 2 மணியளவில் மில்லின் குடோனில் இருந்து கரும்புகை வந்தது. இதனை இரவு வேலைக்கு வந்த தொழிலாளர்கள் பார்த்தனர்.
உடனடியாக நிர்வாகத்தினருக்கு இதுபற்றி தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வண்டிகள் வருவதற்குள் தீ மள மளவென்று குடோன் முழுவதும் பரவத் தொடங்கியது. இதனால் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்து சிதறியது. சுவரிலும் விரிசல் ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.