யானைகளை அனுப்ப முடியாது- வண்டலூர் உயிரியல் பூங்கா உறுதி
சென்னை: வண்டலூர் வன விலங்கு பூங்காவில் யானைகளை தொடர்ந்து பராமரிக்க தமிழக அரசு விடுத்த கோரிக்கையை மத்திய உயிரியல் ஆணையம் நிராகரித்து விட்டது.
எனினும் யானைகளை பூங்காவில் இருந்து வெளியேற்ற முடியாது என்பதில் பூங்கா அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.
சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக யானைகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உயிரியல் பூங்காக்களில் யானைகளை வைத்திருக்கக் கூடாது என்று மத்திய வனத்துறையின் கீழ் செயல்படும் உயிரியல் பூங்காக்கள் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் திடீர் தடை விதித்தது.
உயிரியல் பூங்காக்களில் வைக்கப்பட்டிருக்கும் யானைகளை, தேசிய பூங்காக்கள் அல்லது புலிகள் காப்பகத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
வனப் பகுதிகளில் சுதந்திரமாக நீண்ட தூரம் உலாவக் கூடிய யானைகளை பூங்காக்களில் கட்டிப்போடுவது இயற்கைக்கு மாறானது என்ற அடிப்படையில் யானைகளை வனங்களில் கொண்டு போய் விடுமாறு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், தமிழகத்தில் உள்ள உயிரியல் பூங்காக்களில் வண்டலூரில் மட்டுமே, யானைகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. யானைகளுக்கு உகந்த சூழல் அங்கு இருக்கிறது.
எனவே வண்டலூர் உயிரியல் பூங்காவில், யானைகளை தொடர்ந்து வைத்திருக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி, மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு கடந்த டிசம்பரில் தமிழக அரசு கடிதம் எழுதியது.
ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய உயிரியல் பூங்காக்கள் ஆணையம் நிராகரித்து விட்டது. ஆனால், யானைகளை வேறு இடத்துக்கு அனுப்ப முடியாது என உறுதியாக தெரிவித்து வண்டலூர் பூங்கா சார்பில் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அலுவலகத்தை நேரடியாக அணுகி, யானைகளை தக்க வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.