தேர்வுத் தோல்விக்கு அரசே காரணம்-30,000 ஆசிரியர் பயற்சி மாணவர்கள் அதிர்ச்சிப் புகார்
கோவை: ஆசிரியர் பயிற்சித் தேர்வில் கடந்த ஆண்டு 30 ஆயிரம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இதற்கு அரசுதான் காரணம், வேண்டும் என்றே தோல்வி அடையச் செய்து விட்டதாக அவர்கள் அதிர்ச்சிப் புகாரை கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டில் தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்வு எழுதியவர்களில் 69 சதவீதம் பேரை, திட்டமிட்டே அரசு, தோல்வி அடையச் செய்துள்ளதாக பெரும் புகார் கிளம்பியுள்ளது.
008-2009 கல்வியாண்டிற்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்வு, 2009 ஜூனில் நடந்தது. தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 120 மாணவ, மாணவியர் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வில் 50 மதிப்பெண் பெற்றால் மட்டுமே, தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவுகள், பிப்ரவரி 27ம் தேதி வெளியானது.
இதைப் பார்த்த மாணவர்களில் பெரும்பாலானோர் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், கிட்டத்தட்ட 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் தேர்ச்சி பெறவில்லை. வெறும் 31 சதவீதம் பேர் மட்டுமே பாஸ் ஆகியுள்ளனர்.
இது தமிழகம் முழுவதும் ஆசிரியர் பயிற்சி தேர்வை எழுதிய மாணவ, மாணவியரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அரசு பெருமளவில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதனால் ஆசிரியர் பயிற்சியை முடிக்க தமிழகத்தில் பெரும் ஆர்வம் உள்ளது. இதனால் பலரும் சேர்ந்து படித்து வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் இந்தப் படிப்புக்கு வருவோரில் முக்கால்வாசிப் பேர் ஏழை, நடுத்தர வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான். இந்த நிலையில் பெருமளவிலானவர்களை பெயில் ஆக்கியுள்ளதால், ஒரு வருடப் படிப்பும், செலவும் வீணாகி, பதிவு மூப்பும் பறிபோவதாக அவர்கள் வேதனை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலைக்கு அரசுதான் காரணம் என்று இந்திய மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கல்வியாண்டு துவங்கிய பின், ஐந்து மாதங்கள் கழித்தே பாடநூல் வழங்கினர். புதிய பாடத்திட்டம், கலைத் திட்டம் உருவாக்கப்பட்டன, வினாத்தாள் அமைப்பு மாற்றப்பட்டது என இதற்கான காரணங்களையும் இந்த அமைப்பு அடுக்குகிறது.
கடந்த ஆண்டில் 40 மதிப்பெண்ணுக்கு ஒரு மதிப்பெண் கேள்வியும், 60 மதிப்பெண்ணுக்கு தியரி பிரிவும் இடம் பெற்றிருந்தன. இந்த ஆண்டில், முழுக்க முழுக்க தியரி முறையில் மட்டுமே கேள்விகள் இருந்ததாகவும் மாணவ, மாணவியர் குறை கூறியுள்ளனர்.
மேலும் தேர்வு முடிந்து கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் வரை முடிவை வெளியிடாமல் இருந்தது குறித்தும் மாணவ, மாணவியர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாகவும் மாணவ, மாணவியர் கூறியுள்ளனர்.
மேலும், கோவையைச் சேர்ந்த ஐந்து ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் இது தொடர்பாக கலெக்டரைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.