காவிரியில் கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை: ஜெய்ராம் ரமேஷ்
டெல்லி: காவிரியில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதற்கு முன்பாக அவற்றை சுத்திகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
தமிழகத்தில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பது குறித்து ராஜ்யசபாவில் உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்,
'காவிரியில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதற்கு முன்பாக அவற்றை சுத்திகரிப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
கழிவுகளை சுத்திகரிப்பதற்கான ஆலை மற்றும் மறு சுழற்சிக்கான அடிப்படையிலான கழிவுகள் சுத்திகரிப்பு போன்ற வசதிகளை தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் கொண்டுள்ளன.
சுத்திகரிக்கப்பட்ட கழிவுகள் தோட்ட வேலை, நீர்ப் பாசனம் போன்ற பணிகளுக்கு மறு சுழற்சி செய்யப்படுகின்றன அல்லது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த தர நிர்ணய அளவுகளில் உள்ளூர் நீர் நிலைகளில் விடப்படுகின்றன.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி, கர்நாடகத்தில் எந்த தொழிற்சாலையும் தனது கழிவுகளை கழிவுகளை காவிரி ஆற்றில் கலக்க விடுவதில்லை' என்றார்.
மேலும், 'நாடு முழுவதும் 43 தொழில் பகுதிகள் மிக மோசமாக மாசடைந்துள்ளன. அவற்றுள், தமிழகத்தைச் சேர்ந்த வேலூர், கடலூர், மணலி, கோயம்புத்தூர் ஆகிய நான்கு பகுதிகளும் அடங்கும்' என்று குறிப்பிட்டார்.